விஜய் படத்தின் டைட்டில் என்னுடையது : குமுறும் தெலுங்கு இயக்குனர்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவரது 68வது படத்திற்கு ‘தி கோட்’ என டைட்டில் வைக்கப்பட்டு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்பதன் சுருக்கமாக இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டாலும் ரசிகர்கள் இந்த டைட்டிலை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதேசமயம் தெலுங்கு திரையுலகை சேர்ந்த இயக்குனர் நரேஷ் உப்பிலி என்பவர் இந்த டைட்டிலை ஏற்கனவே தனது படத்திற்கு வைத்துள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் தனது மனக்குமுறலையும் வெளிப்படுத்தியுள்ளார்.தெலுங்கில் விஷ்வக் சென் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பாகல் என்கிற படத்தை இயக்கியவர் தான் இந்த இயக்குனர் நரேஷ் குப்பிலி. அடுத்ததாக இவர் தற்போது இயக்கியுள்ள படத்திற்கு கோட் என டைட்டில் வைத்திருந்தாராம்.

படத்தின் வேலைகள் முடிந்து தற்போது புரமோஷன் பணிகளை துவங்க இருக்கும் நிலையில் தான், இப்படி விஜய் படத்திற்கு கோட் என டைட்டில் அறிவிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் நரேஷ் குப்பிலி. அதேசமயம் இவர் இதுவரை தனது படத்திற்காக கோட் என டைட்டில் வைத்துள்ளதாக எந்த இடத்திலும் போஸ்டராகவோ அல்லது ஒரு அறிவிப்பாக கூட வெளியிட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.இப்படி மிகப்பெரிய படங்களின் டைட்டில் அறிவிக்கப்படும்போது சமீப காலமாக இது போன்ற சர்ச்சைகள் எழுதுவது வாடிக்கையாகி விட்டது. இதற்கு முன்பு விஜய் நடித்த லியோ படத்திற்கும் அதன் டைட்டில் அறிவிக்கப்பட்ட போது தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த இயக்குனர் ஒருவர் தானும் இதே டைட்டிலை தனது படத்திற்கு பதிவு செய்து வைத்துள்ளதாக எதிர்ப்புக் குரல் எழுப்பினார். அவரை எப்படியோ சமாதானப்படுத்தி அந்த பிரச்சினையை சரி செய்தார்கள்.அதேபோல ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்திற்கும் அந்த டைட்டில் அறிவிக்கப்பட்ட போது மலையாள திரையுலகை சேர்ந்த இயக்குனர் ஒருவர் கிட்டத்தட்ட தன் படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில், தான் ஜெயிலர் என பதிவு செய்து வைத்திருந்த பெயரை ரஜினி படத்துக்கு வைத்து விட்டதால் தனது படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பாக பேட்டி கொடுத்து சர்ச்சையை கிளப்பினார். ஆனாலும் ஜெயிலர் படம் வெளியான பிறகு தனது படத்தையும் ஜெயிலர் என்கிற பெயரிலேயே மலையாளத்தில் வெளியிட்டார் அந்த இயக்குனர்.முன்பெல்லாம் தமிழில் மிகப்பெரிய நடிகர்களின் படங்களுக்கு டைட்டில் அறிவிக்கும் போது தமிழ் திரையுலகை சேர்ந்த யாரோ ஒருவர் தான் இப்படி டைட்டில் பிரச்சினையை கிளப்பினார்கள். தற்போது அவர்களது படங்கள் பான் இந்தியா படமாக வெளியாகி வரும் சூழலில் மாற்று மொழி திரை உலகில் இருந்தும் இதுபோன்று டைட்டில் பிரச்சனை தலை தூக்க ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *