முதலீட்டை கொட்டும் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள்.. மோடியை கொச்சைப்படுத்துறீங்களே.. பாஜக கேள்வி!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெரு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதாக பெருமையாக கூறுகிறார் முதல்வர் ஸ்டாலின், இனியாவது திமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்திய கார்ப்பரேட்டுகளை குறைகூறுவதை நிறுத்துமா என்று தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாகத் தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என இலக்கை நிர்ணயித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக, உலக அளவில் மிகப்பெரிய நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் ஈர்க்க தமிழ்நாட்டில் நேற்றும் இன்றும் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்று வருகிறது.

நேற்று ஒரே நாளில் ரூபாய் 5.5 லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகளைப் பெறும் வகையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் கடைசி நாளான இன்று 300க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழக பாஜக விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “நேற்று சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் டாட்டா நிறுவனம் ரூ.10,000 கோடி முதலீடும், (40,500 பேருக்கு வேலைவாய்ப்பும்), அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.35,000 கோடியும், ஜிண்டால் நிறுவனம் ரூ.10,000 கோடியும் (6,500 பேருக்கு வேலைவாய்ப்பும்), டி.வி.எஸ் நிறுவனம் ரூ.5,000 கோடியும், கோத்ரெஜ் ரூ.515 கோடியும் முதலீடு செய்வதாக செய்யப்போவதாக பெருமைப்படுகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்திய நிறுவனங்களே தமிழகத்திற்கு அதிக முதலீட்டை கொடுத்திருக்கின்றன. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போகிறார் என்றுகூறி கொச்சைப்படுத்தும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தாங்கள் பேசியதை வாபஸ் பெறுவார்களா?அல்லது இனியாவது பேசுவதை நிறுத்துவார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *