முதல்வரில் கவனம் எல்லாம் ஆட்சியில் இல்லை! பையன துணை முதல்வர் ஆக்குவதிலேயே இருக்கு! இறங்கிய அடிக்கும் அண்ணாமலை

ஏழு மாதமாக எந்த வேலையும் செய்யாமல் புழல் சிறையிலிருந்து கொண்டே அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார் என அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூரில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர்கள் கூட்டம், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை;- தென் தமிழகத்தில் கனமழை பெய்தபோது, நெல்லை மேயர் எங்கிருந்தார் என்று தெரியுமா? சேலத்தில் நடைபெறவிருந்த திமுக இளைஞரணி மாநாட்டுக்கு பந்தல் போட்டுக் கொண்டிருந்தார். பாதிப்புகளை பார்வையிட யார் செல்ல வேண்டும்? உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவும், அமைச்சர் துரைமுருகனும் செல்ல வேண்டும். ஆனால், அங்கு சென்று யார் பார்த்தது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

காரணம், முதல்வரைப் பொறுத்தவரை தெளிவாக இருக்கிறார். சேலம் இளைஞரணி மாநாடு முடிந்த பின்னரோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னரோ, எப்படியாவது உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவதற்கு. அதற்கான ஒத்திகைதான் தற்போது நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம். சென்னையின் வளர்ச்சி கீழே இறங்க ஆரம்பித்துவிட்டது. இந்தியாவின் தூய்மையான மாநகரங்களின் பட்டியலில் 43-வது இடத்தில் இருந்த சென்னை, இன்றைக்கு 199-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் மிக முக்கியமான நகரமாக இருக்கும் சென்னை நம் கண் முன்னால் அழிந்து கொண்டிருக்கிறது.

குடும்பத்தில் ஒருவருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று, தென் சென்னை எம்.பி சீட்டை தமிழச்சி தங்கபாண்டியனுக்கும், தயாநிதி மாறனுக்கு மத்திய சென்னை எம்.பி சீட்டும், ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமிக்கு வடசென்னை எம்.பி சீட் கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கக்கூடிய 15 குடும்பங்களுக்கும் அவர் சீட் கொடுத்தால்தான், தன்னுடைய மகனுக்கு அவர் சீட் கொடுக்க முடியும். இப்போது உதயநிதி ஸ்டாலினுக்கான பில்டப் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சரின் கவனம் எல்லாம் ஆட்சியில் இல்லை. எப்படி நம்முடைய மகன் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக கொண்டு வந்து முதலமைச்சராக்குவது என்பதில் தான் உள்ளது.

நாம் புதிதாக வீடு கட்டினால் எல்லோருக்கும் அழைப்பு கொடுப்போம். வந்த சிலர் சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிட்டனர். சிலர் இன்னும் நம் வீட்டோடு இருக்கின்றனர். வெளியில் சென்றவர்கள், சாப்பாடு சரியில்லை வீடு சரியில்லை என்று கூறுவது அவர்களது கருத்து. யாருக்காகவும் நம்மை பற்றி தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. வீடு நம்முடையது. கதவு திறந்தே உள்ளது. யாரும் வரலாம்.

2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது பாஜக மற்றும் பிரதமர் மோடியின் கணக்கு. தமிழகத்தில் திமுகவை தோற்கடிக்கக்கூடிய ஒரே கட்சி பாஜக தான். இப்போது இருக்கும் 35 அமைச்சர்களில் 11 பேர் மீது நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அதில், ஏழு மாதமாக எந்த வேலையும் செய்யாமல் புழல் சிறையிலிருந்து கொண்டே ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதையெல்லாம் மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *