இஸ்ரேலிய பணயக்கைதிகள் காணொளியை வெளியிட்டு… தலைவிதியை அறிவிப்போம் என்ற ஹமாஸ்

காஸா மீதான தாக்குதலை நிறுத்தும் கோரிக்கையுடன் இஸ்ரேலிய பணயக்கைதிகள் மூவரின் காணொளி ஒன்றை ஹமாஸ் படைகள் வெளியிட்டுள்ளது.

போர் தொடர்பில் கோரிக்கை

குறித்த காணொளியில், இஸ்ரேல் அரசாங்கத்திடம் அவர்கள் போர் தொடர்பில் கோரிக்கை வைப்பதுடன், தங்களை மீட்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர். காஸா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல் தொடங்கி 100 நாட்களை எட்டியுள்ளது.

இந்த நிலையில் ஞாயிறன்று ஹமாஸ் வெளியிட்டுள்ள 37 நொடிகள் கொண்ட காணொளி ஒன்றில் இஸ்ரேலிய பணயக்கைதிகள் மூவர் போர் நிறுத்தும்படி தங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றனர்.

அந்த காணொளியின் இறுதியில், இவர்களின் தலைவிதியை நாளை அறிவிப்போம் என முடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காஸா மீது இஸ்ரேலியப் படைகள் ஷெல் தாக்குதல் நடத்தியதால் சில பணயக்கைதிகளுடனான தொடர்பை இழந்ததாக ஹமாஸ் கூறியது, அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஹமாஸ் படைகள் குறிப்பிட்டது.

படுகொலை செய்வதாக

மட்டுமின்றி, போர் நீடிக்கும் என்றால் பணயக்கைதிகளை படுகொலை செய்வதாக ஏற்கனவே ஹமாஸ் படைகள் மிரட்டலும் விடுத்திருந்தன. பணயக்கைதிகள் தொடர்பாக பொதுவெளியில் கருத்து தெரிவிப்பதை பொதுவாக இஸ்ரேல் மறுத்து வருகிறது.

ஆனால் இஸ்ரேல் தங்களது தாக்குதலால் பணயக்கைதிகளுக்கு ஏற்படும் அபாயங்கள் குறித்து அறிந்திருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் போரைத் தூண்டிய அக்டோபர் 7ஆம் திகதி எல்லை தாண்டிய தாக்குதலில் ஹமாஸ் படைகளால் சிறை பிடிக்கப்பட்ட சுமார் 240 பேரில், நவம்பர் போர்நிறுத்தத்தில் பாதி பேர் விடுவிக்கப்பட்டனர்.

132 பேர் காஸாவில் தற்போது இருப்பதாகவும் அவர்களில் 25 பேர் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *