“தலைசிறந்த தமிழ்ப் புலவர் திருவள்ளுவர்” – பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

மிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டும், நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்படவிருக்கிறது.
அந்த வகையில் பொங்கல் தின விழாவையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே, மாட்டுப் பொங்கல் தினமான இன்று திருவள்ளுவர் தினமும் அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, காவி உடை அணிந்திருக்கும் திருவள்ளுவர் புகைப்படத்தை வெளியிட்டு திருவள்ளுவர் தினத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர், ‘வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது’ என்று குறிப்பிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, திருவள்ளுவர் தினத்துக்குத் தனது வாழ்த்துகளைத் தமிழ் மொழியில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது. காலத்தால் அழியாத அவரது போதனைகள் நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது.

நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது. அவர் எடுத்துரைத்த அனைவருக்குமான விழுமியங்களைத் தழுவுவதன் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் நமது உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்துவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *