திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு சட்டக்கல்லூரி மாணவன் பலி; சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த ராயர்பாளையம் அபிராமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரண் (வயது 24). இவர் தருமபுரி சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு சட்ட படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரணுக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

அங்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி சட்டக் கல்லூரி மாணவன் சரண் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத்தீ போல பரவி உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், உடனடியாக பல்லடம் நகராட்சி நிர்வாகம், மாவட்ட சுகாதாரத் துறையினர் கொசு மருந்து தெளித்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வழிவகை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். பல்லடத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சட்டக் கல்லூரி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *