இந்தியாவுக்கு எதிரான வரலாற்றை எங்களால் தொடர முடியும்: தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்

தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் வெற்றி பெறாத வரலாற்றைத் எங்களால் தொடர முடியும் என தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஷுக்ரி காண்ராட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் (டிசம்பர் 26) தொடங்குகிறது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் வெற்றி பெறாத வரலாற்றைத் தொடர முடியும் என தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஷுக்ரி காண்ராட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான ரபாடா மற்றும் லுங்கி இங்கிடி காயத்திலிருந்து மீண்டு வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் துடிப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருப்பார்கள். புத்துணர்ச்சியாக இருப்பது சிறப்பாக செயல்பட உதவும் என்பதை நான் ஆழமாக நம்புகிறேன். ஆனால், டெஸ்ட் தொடர் தொடங்க இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளது. இருப்பினும், அது குறித்து மிகுந்த கவலையடையத் தேவையில்லை.

அணியில் விளையாடுவதற்கு ரபாடா மற்றும் இங்கிடி தயாராக இருப்பார்கள். அவர்கள் அணியில் இடம்பெறுவது குறித்த உறுதியான தகவல் நாளை தெரியும். வரலாறு என்ன சொல்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதே கிடையாது. அந்த வரலாற்றைத் எங்களால் தொடர முடியும் என்ற நம்பிக்கையுள்ளது என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *