அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை: பூஜைகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி!

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான சடங்குகள் ஜனவரி 12 முதல் தொடங்கியது. கடந்த 16 ஆம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அதேசமயம், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டைக்கான பூஜைகள் நடந்து வருகின்றன. அதனை பிரதமர் மோடி செய்து வருகிறார். அவருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தும் உடனிருக்கிறார். லக்ஷ்மிகாந்த் தீட்சித் தலைமையிலான அர்ச்சகர்கள் குழு பிரான் பிரதிஷ்டையின் முக்கிய சடங்குகளை செய்து வருகின்றன.

மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜால் கருங்கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து வயதுடைய ராமர் சிலை ஏற்கனவே கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. கருவறையில் வைக்கப்படவுள்ள அச்சிலைக்கு ‘பிரான் பிரதிஷ்டை’ பூஜைகளை பிரதமர் மோடி செய்து வருகிறார்.

முன்னதாக, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் விரதத்தை கடந்த 12ஆம் தேதி தொடங்கினார். யாம் விதிகளை கண்டிப்பாக பின்பற்றிய பிரதமர் மோடி, தினமும் போர்வையை விரித்து தரையில் தூங்குவதாகவும், இளநீர் மட்டுமே குடித்து வந்தார்.

அத்துடன், நாட்டில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். குறிப்பாக, ராமருடன் தொடர்புடைய கோயில்களில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். தமிழ்நாட்டின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை, கோதண்ட ராமர் கோயிலில் நேற்று தரிசனத்தை முடித்து விட்டு, டெல்லி சென்ற பிரதமர் மோடி, அயோத்தி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை பூஜைகளில் கலந்து கொண்டுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *