பிரதமர் மோடி உதவியின்றி ராமர் கோயில் சாத்தியம் அல்ல: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டு

புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட பின்னர் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.

அவர் கூறியதாவது: உலகில் அனைவரையும் விட அதிக விருப்பம் கொண்ட அரசியல்வாதியான பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

500 வருட கால நீண்ட போராட்டத்துக்கு பின் இன்று ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நம் அனைவரதுஉணர்வுகளிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இன்றைய இந்த இதிகாச நிகழ்ச்சிக்கு பின் நம் நாட்டின் அனைத்து நகரங்களும், கிராமங்களும் அயோத்தியாக மாறி விட்டன.

அனைவரது உணர்வுகளும் ஸ்ரீராமஜென்மபூமியை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் ராமரின் பக்தியில் மூழ்கி விட்டது. நான்கு யுகங்களில் ஒன்றான ராமரின் திரேதா யுகத்தில் வந்து விட்டது போல் உணர்கிறோம். கடைசியாக நம் பாரதம் இந்த நாளுக்காகக் தான் காத்திருந்தது. உலகின் எந்த ஒரு நாட்டிலும் தமது கடவுளுக்காக தமது சொந்த நாட்டில் இந்த அளவுக்கு எவரும் போராடிக் கோயிலை கட்டியிருக்க முடியாது.நாம் எந்த இடத்தில் கட்ட வேண்டும் என சங்கல்பம் எடுத்தோமா அதே இடத்தில் இன்று ராமர் கோயில் எழுந்துள்ளது.

நமது பாரதம் முழுவதும் இக்கோயிலின்மூலம் ஒரு ஆன்மிகக் கயிற்றால் கட்டப்பட்டுள்ளது. இதற்காக அனைவருக்கும் பல கோடி நமஸ்காரங்கள். இந்த சங்கல்பத்தை முடிக்க முக்கியக் காரணமான பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த உலகம் முழுவதும் அயோத்தியின் வைபவத்தை கொண்டாடுகிறது. இவை அனைத்தும் பிரதமர் மோடியின் உதவியின்றி சாத்தியமே அல்ல.

அயோத்தியில் விமான நிலையம், நான்குவழிச் சாலைகள், சரயு நதியில் படகுத்துறை போன்றவை சாத்தியமா? என்ற ஒரு கருத்து அப்போது இருந்தது. ஆனால், இன்று நம் இரட்டை இன்ஜின் அரசுகளால் அனைத்தும் சாத்தியமாயிற்று.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *