இன்று தேசிய வாக்காளர் தினம்.. ஏன் இந்த தினம் கொண்டாடப்படுகிறது? முக்கியத்துவம் என்ன?

இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாளை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 14-வது தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாப்படுகிறது.

தேசிய வாக்காளர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

நாட்டு மக்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேர்தல் செயல்பாடுகளில் மக்களை பங்கேற்க ஊக்குவிக்கவும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியும் நடைபெறும்.

அதன்படி 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அட்டையும் வழங்கப்படும். தேசிய, மாநில, மாவட்டம், தொகுதி மற்றும் வாக்குச் சாவடி மட்டங்களில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது, இது நாட்டின் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றாகவும் உள்ளது.

தேசிய வாக்காளர் தினம் 2024: கருப்பொருள்

இந்த ஆண்டுக்கான கருப்பொருள்’வாக்களிப்பதைப் போல எதுவும் இல்லை, நான் நிச்சயமாக வாக்களிக்கிறேன்’ என்பதாகும். இது கடந்த ஆண்டு கருப்பொருளின் தொடர்ச்சியாகும்.

தேசிய வாக்காளர் தினம் இந்த ஆண்டு எவ்வாறு கொண்டாடப்பட உள்ளது?

இந்திய தேர்தல் ஆணையம் புது தில்லியில் ஒரு தேசிய விழாவை ஏற்பாடு செய்துள்ளது, இந்த விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் (சுயாதீன பொறுப்பு), அருண் ராம் மேக்வால் கெளரவ விருந்தினராக கலந்து கொள்கிறார்.

மாலத்தீவு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, இலங்கை மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேர்தல் நிர்வாக அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வின் போது 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த தேர்தல் நடைமுறைகளுக்கான விருதுகளை ஜனாதிபதி முர்மு வழங்குவார்.

தகவல் தொழில்நுட்ப முன்முயற்சிகள், பாதுகாப்பு மேலாண்மை, தேர்தல் மேலாண்மை, எளிதில் அணுகக்கூடிய தேர்தல், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் பரப்புரையில் பங்களிப்பு போன்ற பல்வேறு துறைகளில் 2023 ஆம் ஆண்டில் தேர்தல்களை நடத்துவதில் சிறப்பாக செயல்பட்டதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.

வாக்காளர்களின் விழிப்புணர்வில் மதிப்புமிக்க பங்களிப்பிற்காக அரசாங்கத் துறைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும். இதனிடையே, மத்தியில் ஆளும் பாஜகவின் இளைஞர் பிரிவு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி இன்று ஏராளமான இளம் வாக்காளர்களுடன் உரையாற்ற உள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *