போக்குவரத்து ஊழியர் அடித்து கொலை; போலீசாரால் தேடப்பட்ட பாதிரியார் நீதிமன்றத்தில் சரண்

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே உள்ள மையிலோட்டைச் சேர்ந்தவர் சேவியர் குமார் (வயது 45). அரசு போக்குவரத்து கழக ஊழியரான இவர், நாம் தமிழர் கட்சி நிர்வாகியாகவும் இருந்து வந்தார்.

இவர் மையிலோடு தூய மிக்கேல் அதிதூதர் ஆலய பாதிரியார் இல்லத்தில் கடந்த 20-ம் தேதி மாலை அடித்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மையிலோட்டைச் சேர்ந்த தக்கலை ஒன்றிய திமுக செயலாளரும், இரணியல் வக்கீல் ரமேஷ்பாபு, பாதிரியார்கள் ராபின்சன், பெனிட்டோ உள்பட 15 பேர் மீது இரணியல் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாதிரியார்கள் ராபின்சன், பெனிட்டோ உள்ளிட்டோரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய பாதிரியார் ராபின்சன் (30) நேற்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்கவும், வரும் 29-ம் தேதி இரணியல் குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் ஆஜர்படுத்தவும் திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் வரதராஜன் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் பாதிரியார் ராபின்சன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே நீதிமன்றத்தில் சரண் அடைந்த பாதிரியார் ராபின்சனை போலீஸார் நீதிமன்றத்தின் பின் வாசல் வழியாக அழைத்து சென்றதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *