இந்தியா செய்த ட்ரிக்.. நம்பி ஏமாந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.. முதல் இன்னிங்க்ஸில் இந்தியா மெகா ஸ்கோர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி செய்த ஒரு விஷயத்தை நம்பி ஏமாந்து இருக்கிறார் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி துவங்கும் முன் பேட்டி அளித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்தப் போட்டியின் பிட்ச் ஸ்பின் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். ஆனால், எப்போதிருந்து ஸ்பின் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் எனத் தெரியாது என்றார்.

அவர் கூறியதைப் போலவே அந்த பிட்ச் பார்க்க ஸ்பின் பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பது போலவே இருந்தது. அதை நம்பி இங்கிலாந்து அணி மூன்று ஸ்பின்னர்கள் மற்றும் ஒரு வேகப் பந்துவீச்சாளரை மட்டும் வைத்துக் கொண்டு களமிறங்கியது. போட்டியில் முதலில் பந்து வீசிய இந்திய அணி அனுபவ ஸ்பின்னர்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேலை வைத்து விக்கெட் வேட்டை நடத்தியது. அப்போதும் கூட பிட்ச் முழுமையாக ஸ்பின் பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பது போலவே தெரிந்தது.

அடுத்து இந்திய அணி பேட்டிங் ஆடிய போது இங்கிலாந்து அணி துவக்கம் முதலே ஸ்பின்னர்களை பந்து வீச வைத்தது. ஆனால், அந்த அணியால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் குவித்து இருக்கிறது. இந்திய அணிக்கு வேலை செய்த ஸ்பின் பந்துவீச்சு, இங்கிலாந்து அணிக்கு வேலை செய்யாமல் போனது ஏன்?

அது பற்றி விமர்சகர்கள் கூறி உள்ளனர். பிட்ச் மெதுவாக இருந்ததே தவிர ஸ்பின் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கவில்லை என்பது தான் உண்மை. இந்திய ஸ்பின்னர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் அந்த மெதுவான பிட்ச்சில் சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணற வைத்தனர். அதனால், விக்கெட் கிடைத்தது. ஆனால், இங்கிலாந்து ஸ்பின்னர்கள் அனுபவம் குறைந்தவர்கள். அத்துடன் பிட்ச் ஸ்பின் பந்து வீச்சுக்கு இயல்பாகவே ஒத்துழைக்கவில்லை என்பதால் அவர்கள் சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசினால் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால், அனுபவமின்மையால் அவர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

இந்த இடத்தில் தான் இங்கிலாந்து அணி, இந்திய அணியைப் பார்த்து மூன்று ஸ்பின்னர்களை அணியில் தேர்வு செய்தால் வெற்றி பெற்று விடலாம் என நம்பி ஏமாந்து இருக்கிறது. எனினும், ஹைதராபாத் பிட்ச் மூன்றாவது நாளில் இருந்து ஸ்பின் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என கூறப்படுகிறது. அதற்குள் இந்தியா தன் முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தில் பெரிய ஸ்கோர் சேர்த்து விடும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *