தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் நேச பிரபு. தனியார் செய்தித் தொலைக்காட்சியின் பல்லடம் மற்றும் சூலூர் பகுதி செய்தியாளராக செயல்பட்டு வந்த நிலையில் அவர் மீது மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையல் திருப்பூர் அருகே தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், சிகிச்சையில் உள்ள செய்தியாளருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது., “திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர் நேச பிரபு அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்வு மிகவும் கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் நேச பிரபு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இதனை ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி, மருத்துவ சிகிச்சையில் உள்ள நேசப் பிரபுவுக்கு, பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து ரூ 3 லட்சம் வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *