மேட்ச் பிக்சிங்கில் சோயிப் மாலிக்? ஒப்பந்தத்தை ரத்து செய்த பிபிஎல் நிர்வாகம் !

பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக், சமீபத்தில் நடந்த மூன்றாவது திருமணத்திற்குப் பிறகு, வங்கதேச பிரீமியர் லீக் (பிபிஎல்) தொடரில் பங்கேற்றார்.

இந்த சூழலில், பார்சூன் பாரிஷல் அணிக்காக விளையாடிய சோயிப் மாலிக், குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரில் தொடர்ந்து 3 நோபால்களை வீசினார். ஸ்பின்னர்கள் ஒரு ஓவரில் ஒரு நோபால் வீசுவதே அதிகம். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு ஓவரில் சோயிப் மாலிக் தொடர்ந்து மூன்று நோபால்களை வீசியது அதிருப்தியை, பல்வேறு சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.

அதாவது, நோபால்களை வீசுவது பிரச்சினை இல்லை. ஆனால், மாலிக் மூன்று நோபால்களை வீசும்போது, கிரீஸை மிதித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. முன் பகுதி பாதத்தை மட்டுமே, தரையில் படும்படி பந்துவீசினார். ஆனால், மற்ற பந்துகளின்போது பாதம் முழுவதுமாக தரையில் பட்டதாக கூறப்படுகிறது. எனவே, சோயப் மாலிக் மேட்ச் பிக்சிங் அல்லது ஸ்பாட் பிக்சிங் செய்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் வங்கதேச பிரீமியர் லீக் தொடரை நடத்தும் நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இறுதியாக சோயிப் மாலிக்கின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக, பார்சூன் பாரிஷல் அணி அதிரடியாக அறிவித்தது. பிபிஎல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில், சோயிப் மாலிக் துபாய்க்கு திரும்பினார். மேலும், சோயிப் மாலிக் மீது விசாரணை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், மேட்ச் பிக்சிங் செய்ததாக கூறப்படுவதற்கு சோயிப் மாலிக் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, பார்ச்சூன் பாரிஷல் அணிக்காக நான் விளையாடியது குறித்து சமீபத்தில் பரவி வரும் வதந்திகளை நிராகரிக்க விரும்புகிறேன். இந்த ஆதாரமற்ற வதந்திகளை நான் கடுமையாக மறுக்கிறேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தகவலை நம்புவதற்கும் பரப்புவதற்கும் முன் ஒவ்வொருவரும் அதைச் சரிபார்ப்பது முக்கியம். பொய்கள் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். சொந்த காரணங்களுக்காக நான் பங்களாதேஷை விட்டு வெளியேறி துபாய் வரவேண்டியிருந்தது. வரவிருக்கும் போட்டிகளுக்கு எனது வாழ்த்துகளை பார்ச்சூன் பாரிஷல் அணிக்கு தெரிவித்துக் கொள்கிறேன், தேவைப்பட்டால், அவர்களுக்கு ஆதரவளிக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்றுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *