நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் மணமகன் உயிரிழந்த சோகம்… உயிருக்குப் போராடும் மணமகள்!

உயிருக்கு ஆபத்தான நிலையில் மணப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். நிச்சயம் முடிந்த மகிழ்ச்சியைக் கொண்டாட இருவீட்டாரும் சேர்ந்து கடற்கரைக்கு சென்ற நிலையில், இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் வீரபத்திரர்கோவில் தெருவைச் சேர்ந்தவர் நவீன்குமார். இவருக்கும், கும்பகோணம் செக்கடித்தெருவை சேர்ந்த நிவேதாவுக்கும் நேற்று முன்தினம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

திருமண நிச்சயதார்த்த முடிந்த நிலையில் அந்த மகிழ்ச்சியை கொண்டாட நேற்று காலை இருவீட்டாரின் உறவினர்கள் 25பேர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். மதியம் அனைவரும் தரங்கம்பாடி கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது நவீன்குமார், நிவேதா மற்றும் சரவணன் என்ற சிறுவன் ஆகியோர் பெரிய அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதைப் பார்த்ததும் உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கடலில் இறங்கி உயிருக்குப் போராடியவர்களை மீட்டனர். அவர்களில் நிவேதா மட்டுமே உயிருடன், மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். நவீன்குமார் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். இருவரது உடல்களும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் நிவேதா நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண நிச்சயதார்த்தம் நடந்து ஒருநாள் திரும்புவதற்குள் புதுமாப்பிள்ளை மற்றும் 6 ம் வகுப்பு படித்து வந்த சரவணனும் இறந்தது கும்பகோணம் பகுதியில் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *