சங்கடங்கள் போக்கி வரம் தரும் ‘சங்கடஹர சதுர்த்தி’ விரதம் முறை மற்றும் பலன்கள் இதோ..!!

தை மாத சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது விநாயகருக்கு உகந்த நாளாகும். ‘சங்கட’ என்றால், கஷ்டங்கள், தொல்லைகள், தடைகள் சேருதல் என்று பொருள். ‘ஹர’ என்றால் அழித்தல் என்று பொருள். தை மாதம் பௌர்ணமிக்கு அடுத்த நான்காம் நாள் வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தியாகும். மேலும், இந்நாளில் நம் வாழ்வில் சேரும் அனைத்து கஷ்டங்களையும் நீக்குவதற்கு சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. நம் வாழ்வில் இருக்கும் அனைத்து துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதமாகும்.

அதுபோல், ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிப்பட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். மேலும் உங்களது எல்லாவிதமான காரியங்களும் தடைகளின்றி வெற்றியடையும். எனவே, இந்த சதுர்த்தி திதி நாளில் விரதம் இருப்பது விநாயகருக்கு உகந்த நாளாகும். இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது மிகவும் எளிது என்பதால், எப்படி இருக்க வேண்டும், அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி?
இன்று சங்கடஹர சதுர்த்தி. அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று, பிள்ளையாரை 11 முறை சுற்றி வர வேண்டும். அதுபோல் விநாயகருக்கு அறுகம்புல் கொடுத்து, அர்ச்சனை செய்வது நல்லது. பிறகு தோப்புக்கரணம் போட்டும் விநாயகரை வணங்க வேண்டும். நீங்கள் விரும்பினால் இந்நாளில் விநாயகரோடு, பசு வழிபாடு செய்யலாம். இதனால் உங்களுக்கு கூடுதல் நன்மையே கிடைக்கும். அதனை தொடர்ந்து, விநாயகருக்கு பிடித்த உணவுகளை வீட்டிலேயே செய்து அவருக்கு நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

அதுபோல் கோவிலில் விநாயகருக்கு கொடுக்கப்பட்ட நைவேத்தியங்களை பிரசாதமாக எடுத்துக் கொண்டால் அவற்றை உங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ளவர்களுக்கு கொடுத்து நீங்களும் சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

சங்கடஹர சதுர்த்தி விரதம் நன்மைகள்:

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால், உங்களின் தீர்க்க முடியாத நோய்கள் குணமடையும். வாழ்க்கையில் எப்போதுமே துன்பங்களை கண்டவர்களுக்கு ஒரு நிலையான சந்தோஷம் கிடைக்கும்.

அதுபோல் கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் என பலவிதமான நன்மைகள் கிடைக்கும். மேலும் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால், சனியின் தாக்கம் குறையும்.

நீங்கள் நினைத்த காரியம் தடையில்லாமல் நடக்க வேண்டுமானால், வன்னி விநாயகரை சுற்றி வர வேண்டும். இப்படி செய்தால், நீங்கள் நினைத்தபடி எல்லாமே நடக்கும் என்பது ஐதீகம்.

இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

பொதுவாகவே, வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள்.
ஆனால், பெவுர்ணமிக்குப் பிறகு வரும் தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு. ஏனெனில், அதுதான் சங்கடஹர சதுர்த்தியாகும். அதுவும் இது செவ்வாய்க்கிழமை வந்தால் மிகவும் விசேஷம் என்று சொல்லலாம். அதுபோலவே, ஒவ்வொரு ஆண்டும் வரும் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலனானது, ஒரு மகா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்வதால் கிடைக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *