“ஆளுநர் ஆளுநராக இருக்காமல் அரசியல்வாதிகளாக மாறுவதுதான் பிரச்னை!” – அமைச்சர் ரகுபதி காட்டம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறை காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை இயக்குநர் மஹேஷ்வர் தயாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி,

“இந்தியாவிலேயே சிறைத்துறையை நிர்வகிக்கும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. சிறைவாசிகளை இல்லவாசிகளாக கருதி அவர்களுக்கு சிறப்பான உணவு, நூலகம், சிறைக்குள்ளேயே வேலை வாய்ப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. சிறையை தண்டிக்கும் இடமாக இல்லாமல் ஒருவரை திருத்தும் இடமாக இருக்க வேண்டும் என்கிற முதலமைச்சர் எண்ணத்தை நிறைவேற்றி வருகிறோம். உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலை வழக்கிலிருந்து விடுதலையான சாந்தனுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இலங்கை அரசு அவர்களுக்கான பாஸ்போர்ட் வழங்கவில்லை. அதை பெற்றுத் தருவதற்கு உரிய முயற்சியை எடுத்து வருகிறோம். அரசு அவர்களை கைதியாக நடத்தவில்லை.

ரகுபதி நிகழ்ச்சி

ஆளுநர் ஆளுநராக இருக்காமல் அரசியல்வாதிகளாக மாறும் போது தான் பிரச்னை ஏற்படுகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதியாக மாறும் போக்கை தான் கடைபிடித்து வருகிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு நாகை சென்ற ஆளுநர், ‘அங்கு வீடுகள் கட்டுவதில் தவறு நடந்துள்ளது’ என பொதுவாக கூறுகிறார். குறிப்பிட்டு என்ன தவறு என கூறினால் அவர்கள் மீது நடவடிக்கை நிச்சயம் எடுப்போம். பா.ஜ.க-வின் ஊதுகுழல் போல் தான் ஆளுநர் பேசி வருகிறார். அ.தி.மு.க என்கிற எதிர்க்கட்சி இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. பா.ஜ.க என்கிற எதிர்க்கட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகள் செயலிழந்துள்ளதால் ஆளுநர் ஊடகங்களில் தனது பெயர் வர வேண்டும் என்பதற்காக பல கருத்துக்களை பேசி வருகிறார். எதிர்கட்சிகள் பலம் இழந்துவிட்டதை, ஆளுநரின் செயல்பாடுகள் உறுதிப்படுத்துகிறது” என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *