சிவில் நீதிபதியாகும் முதல் பழங்குடியின பெண்.., பிரசவம் ஆன 2 -வது நாளில் தேர்வு எழுதி சாதனை

23 வயதில் சிவில் நீதிபதியான பழங்குடியின பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

யார் அவர்?
தமிழக மாவட்டமான திருவண்ணாமலை, ஜவ்வாது மலையைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி (23). இவர் ஏலகிரி மலையில் கல்வி கற்று பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர், படித்துக் கொண்டிருக்கும் போதே திருமணமாகிவிட்டது.

இந்நிலையில் தான் கடந்த ஆண்டு TNPSC தேர்வு நடைபெற்றது. அப்போது, ஸ்ரீபதியின் பிரசவ திகதியும், தேர்வு திகதியும் ஒரே நாளில் இருந்தது. ஆனால், தேர்வு திகதிக்கு 2 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்து விட்டது.

ஆனாலும், தேர்வு எழுதுவதில் உறுதியாக இருந்த ஸ்ரீபதி, தனது கணவர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன் குழந்தை பிறந்த 2 -வது நாளில் தேர்வு எழுத காரில் சென்றார்.

இந்நிலையில், சமீபத்தில் TNPSC முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வாகியுள்ளார். இதன்மூலம் 23 வயதில் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள பழங்குடியின பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

ஆசிரியை நெகிழ்ச்சி பதிவு
இந்நிலையில், ஜவ்வாது மலையில் பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி என்பவர் தனது பேஸ்புக் பதிவில், “பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் Civil judge ஸ்ரீபதி. ஜவ்வாதுமலையில் பிறந்து,ஏலகிரி மலையில் கல்வி கற்று,B.A.,B.L., சட்டப்படிப்பை முடித்து, படிப்பின் இடையில் மணமானாலும் இடைநின்று போகாமல் படித்து முடித்தவர்.

இன்று மலையும்,மாவட்டமும், தெரிந்தவர்கள் அனைவரும் ஸ்ரீபதியைப் பாராட்டிப் போற்றிக்கொண்டிருப்பதற்குக் காரணம் அவருடைய வயதா(23), அவருடைய இனமா, அவர் வெற்றியடைந்திருக்கும் துறையா? மூன்றுமே எனலாம் நீங்கள்.

ஆனால், நான் உண்மையிலேயே அதிர்ச்சியில் மூர்ச்சையாயிருந்தேன் இந்தத் தகவலைக் கேட்டபோது. ஸ்ரீபதிக்குத் தேர்வு வரும் திகதியிலேயேதான் பிரசவ திகதியும் கொடுக்கப்பட்டிருந்தது.தேர்வுக்கு இரண்டுநாட்கள் முன் குழந்தையும் பிறந்துவிட்டது.

தேர்வைக் கண்டிப்பாக எழுதவேண்டும் என்று தீவிரமாக இருந்தார்.”இரண்டாவது நாள் என்றால் கொஞ்சம் கஷ்டம்தான். டாக்டரின் ஆலோசனைப்படி வேறெப்படி Safeஆக போகமுடியும் என்று கேட்டுவிட்டு முடிவெடுக்குமாறு நம்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பரமுவிடம் மட்டும் கூறியிருந்தேன்.”(பரமு, ஸ்ரீபதி இணையரின் நண்பர்&ஒரே ஊர்).

மற்றபடி அவர் சென்றாரா இல்லையா என்றுகூட கேட்கவில்லை.யார் வேண்டுமானாலும் ஆலோசனை கூறலாம்.ஆனால் எடுத்து செயல்படுத்துவதில்தானே எல்லாமே இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து,வெறும் காரை, பாதுகாப்பான,சொகுசு காராக மாற்றி ஸ்ரீபதி தேர்வுக்குச் சென்னை செல்கிறார்.தேர்வு எழுதினார்.இதோ வெற்றிவாகையும் சூடியிருக்கிறார்.

உண்மையாகவே நினைத்துப்பார்த்தால் “ஏய் …எப்புட்றா?” என்று சொல்வதற்குமுன் தொண்டைக்குழிக்குள் திக் திக் அடிக்கிறது.இரத்தம் சொட்ட சொட்ட எப்படித்தான் ஸ்ரீபதி இதை எதிர்கொண்டாரோ என்று.அதைவிட பெருமைப்படவும் பாராட்டப்படவும் வேண்டிய நபர் வெங்கட்ராமன், ஸ்ரீபதியின் இணையர்.புள்ளதான் முக்கியமென்று சொல்லி, தடைகல்லாக நிற்கும் ஆண்களுக்கு மத்தியில் அவர் ஸ்ரீபதியின் இறக்கைகளில் பாராசூட் பொருத்திவிட்டவர் போன்று தெரிகிறார். Hats off you Venkat!

அடுத்து. ஸ்ரீபதியின் தாய்.கட்டிக்க ஊரில் இருந்தால் பிழைக்கமுடியாது என்றெண்ணி,தன் சொந்த ஊருக்கே சென்று,அங்குள்ள பள்ளியில் தன்மகளைச் சேர்த்துப் படிக்கவைத்த அவரின் வைராக்கிய குணம்தான் ஸ்ரீபதிக்கு அப்படியே வந்துள்ளது.

இணையேற்பு முடிந்து ஸ்ரீபதி அந்த ஊரில் நடக்கும் ஒரு கிராமசபையில் பங்கேற்று,கிராம வளர்ச்சித் தொடர்பாக பல கேள்விகளை அடுக்கியுள்ளார்.எல்லோரையும் போல அரசியல் பெருமகனார்கள் “இதுக எல்லாம் படிச்சி என்னத்த கிழிக்கப் போவுதுங்கனு நாங்களும் பார்க்கிறோம்” என்று எகத்தாளமாக முதுகுக்குப் பின்புறம் பேசியுள்ளனர். இதோ வெற்றியும் கண்டுள்ளார்.

இனி யாருக்கு வயிற்றில் புளிக் கரைத்துக்கொண்டிருக்கிறது என்றுதான் தெரியவில்லை. யார் சொன்னால் எல்லோருக்கும் கேட்குமோ அந்த இடத்திற்கு எங்கள் வலியைத் தெரிந்த,உணர்ந்த,புரிந்த ஒருவர் சென்றிருப்பது அவ்வளவு நிம்மதியாகவும் பெருமையாகவும் பக்கபலமாகவும் உள்ளது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்று எழுதிவைத்துச் சென்ற எங்கள் முதல்வர் M. K. Stalin க்கு!” என்று கூறியுள்ளார்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *