வரும் 1 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டம்..!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க.வின் சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் பாராளுமன்றத் தொகுதி வாரியாக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்கள் வருகிற 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடை பெற உள்ளன.

இந்த பொதுக்கூட்டங்களை மிகச்சிறப்பாக நடத்துவது குறித்து பாராளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தியது.

இந்தக் கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் பாராளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினருமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதுவரை ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் பயனடைந்து இருக்கிறார்கள். அதாவது தகுதி உள்ளவர்களில் 85-ல் இருந்து 90 சதவிகித மகளிருக்கு உரிமைத் தொகை சென்றடைந்து உள்ளது.

கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையில்தான் இந்த மகளிர் உரிமைத் திட் டம், மகளிருக்குக் கட்டணம் இல்லா பேருந்து வசதி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மகளிருக்குக் கட்டணம் இல்லா பேருந்துத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதந்தோறும் கிட்டத்தட்ட 900 ரூபாய் சேமிக்கிறார்கள்.

2 லட்சத்து 71 ஆயிரம் மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் இந்த இரண்டரை வருடங்களில் பயனடைந்து இருக்கிறார்கள். அதே போல் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். இதில் தினமும் 17 லட்சம் குழந் தைகள் பயன்பெற்று வருகிறார்கள்.

நான் முதல்வன் திட்டம் வாயிலாக இது வரைக்கும் 12 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று இருக்கிறார்கள். இதை மக்களிடம் எடுத்துக் கொண்டு சென்று பேசுங்கள். இதை ஒரு பேசு பொருளாக்குங்கள். ஊழல் ஒழிப்பு பற்றி பேசிய மத்திய அரசு ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறது. இதனை நாம் சொல்லவில்லை, சி.ஏ.ஜி அறிக்கையே அம்பலப்படுத்தி இருக்கிறது.

நம் பிரச்சாரம் வெற்றிப் பிரச்சாரமாக அமைந்திட வேண்டும். தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய மூன்று தொகுதிகளுக்கான மிகப்பெரிய, ஒரு பிரம்மாண்டக் கூட்டம் நம் தலைவரின் பிறந்த நாளான மார்ச் 1-ம் தேதியன்று நடைபெற இருக்கிறது.

எனவே, இந்தக் கூட்டங்களையெல்லாம் மிகப்பெரிய வெற்றி அடையச் செய்ய வேண்டியது நம் கடமை. விடியலை நோக்கி தலைவரின் குரலாக நாம் 2021-ல் தமிழகம் எங்கும் எதிரொலித்தோம். தமிழ்நாட்டுக்குப் புதிய விடியல் கிடைத்தது. அதே போல் இப்போது உரிமைகளை மீட்க தலைவரின் குரலாக எதிரொலிப்போம்.

ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் விடியல் கிடைக்கும் நாள் தூரத்தில் இல்லை. கலைஞர் நூற்றாண்டில் பாசிசம் வீழ்ந்தது, இந்தியா வென்றது என்ற வரலாற்றைப் படைத்திடுவோம். இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *