ஜாம்பவான்களாக இருந்தும் கேப்டன் பதவி கிடைக்காத 5 இந்திய வீரர்கள்!

இந்திய கிரிக்கெட்டில் பல ஜாம்பவான்கள் இருந்துள்ளனர். ஆனாலும் கபில் தேவ், கங்குலி, தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஒரு சிலருக்கே கேப்டன்சி கொடுக்கப்பட்டது. அதில் இவர்கள் பல சாதனைகளை புரிந்துள்ளனர். ஆனாலும் பல வீரர்களுக்கு அவர்களது வாழ்நாள் முழுவதும் இந்திய அணியின் முழு நேரம் கேப்டன் ஆவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய போதிலும், இந்திய அணியின் கேப்டனாக இல்லாத வீரர் யுவராஜ் சிங். இவரை தவிர VVS லக்ஷ்மண், ஹர்பஜன் சிங் போன்றோருக்கும் கேப்டன் ஆவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. நீண்ட நாட்கள் விளையாடியும் கேப்டன்சி வாய்ப்பு கிடைக்காத வீரர்களை பற்றி பார்ப்போம்.

யுவராஜ் சிங்

நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் இந்திய அணிக்காக நீண்ட நாட்கள் கிரிக்கெட் விளையாடி உள்ளார். அவர் 17 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். ஆனால் இந்திய அணிக்கு கேப்டன் ஆகும் வாய்ப்பு அவருக்கு கடைசி வரை கிடைக்கவில்லை. யுவராஜ் சிங் துணை கேப்டனாக மட்டுமே செயல்பட்டார். 2007க்கு பிறகு இந்திய அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பு யுவ்ராஜ்க்கு இருந்தது. ஆனால் டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த தோனி அனைத்து வகை கிரிக்கெட்டிலும் நீண்ட நாட்கள் கேப்டனாக செயல்பட்டார். யுவராஜ் 304 ஒருநாள் போட்டிகள், 40 டெஸ்ட் மற்றும் 58 டி20 போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடியுள்ளார்.

ஹர்பஜன் சிங்

கேப்டனாக நியமிக்கப்படாத மற்றொரு வீரர் ஹர்பஜன் சிங். சுழற்பந்து வீச்சாளரான இவர் 1998 முதல் 2016 வரை இந்திய அணிக்காக 103 டெஸ்ட், 236 ஒருநாள் மற்றும் 28 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஹர்பஜன் சிங் சில தொடர்களில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்பஜன் கேப்டனாக இருந்தார். ஆனாலும் இந்திய அணிக்கு கேப்டன் ஆகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

விவிஎஸ் லட்சுமணன்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விவிஎஸ் லக்ஷ்மண். அவர் 134 டெஸ்ட் போட்டிகளில் 8781 ரன்கள் குவித்துள்ளார். மேலும் லட்சுமண் 86 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனாலும் அவருக்கு கேப்டன்சி வாய்ப்பு கிடைக்கவில்லை, சில டெஸ்ட் தொடர்களில் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் லக்ஷ்மண். லக்ஷ்மண் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ளார்.

ஆர் அஸ்வின்

ஆர் அஸ்வின் இன்னும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 2011ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த அஸ்வின் தற்போது வரை கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் அணியில் இடம் பெற்று வருகிறார். ஆனால் அஸ்வின் இதுவரை கேப்டனாக நியமிக்கப்படவில்லை. ஐபிஎல் மற்றும் தமிழ்நாடு பிரீமியர் லீக் ஆட்டங்களில் கேப்டனாக இருந்துள்ளார்.

ரவீந்திர ஜடேஜா

ஆர் அஸ்வினைப் போலவே ரவீந்திர ஜடேஜாவும் இந்திய அணிக்காக தற்போது விளையாடி வரும் ஒரு முக்கியமான வீரர் ஆவார். அவர் மூன்று வடிவங்களிலும் இந்தியாவின் முதல் தேர்வு ஆல்-ரவுண்டர் மற்றும் விளையாடும் XI கண்டிப்பாக இருப்பார். 2009 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் ஜடேஜாவிற்கு கேப்டனாக இருக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சில போட்டிகளில் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டுள்ளார். ஐபிஎல் 2022ல் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் ஜடேஜா.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *