தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக சேருவது எப்படி..?

தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக சேர அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் விஜய்.

அவர் பேசியிருக்கும் வீடியோவில், “இது எங்களுடைய ஐடி கார்டு. தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டை. நான் எடுத்துக்கொண்டேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை பின்பற்றி, வரப்போகும் சட்டமன்ற தேர்தலை நோக்கி, என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய, நாங்கள் ஏற்கெனவே வெளியிட்ட கட்சியின் உறுதிமொழியை படியுங்கள்.

உங்களுக்குப் பிடித்திருந்தால், நீங்கள் விருப்பப்பட்டால் உறுப்பினராக சேருங்கள்” என தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் விஜய் சொன்ன உறுதிமொழி இடம்பெற்றுள்ளது. மேலும் அறிக்கை வாயிலாகவும், இந்த உறுப்பினர் சேர்க்கை செயலி குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழக வெற்றிக் கழகம் எல்லோருக்கும் வணக்கம் மகளிர் அனைவருக்கும் எனது அன்பான மகளிர்தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்னாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை நான் பெற்றுக்கொண்டது குறித்துப் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற அடிப்படைச் சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து, மக்கள் பணி செய்ய விரும்பினால், நமது கட்சியின் உறுதிமொழியைப் படித்துவிட்டு, கீழே உள்ள உறுப்பினர் சேர்க்கை QR-Code இணைப்புகளைப் பயன்படுத்தி, மிகவும் சுலபமான முறையில் உறுப்பினர் அட்டையை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

வாருங்கள்! தோழர்களாக இணைந்து, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சரித்திரம் படைப்போம், இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *