சிஎஸ்கே அணிக்கு இரண்டாவது அடி.. முக்கிய பவுலரால் ஏற்பட்ட குழப்பம்.. தோனி எடுக்கப் போகும் முடிவு

கடந்த வாரம் சில்ஹெட்டில் நடைபெற்ற இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டி20 போட்டியின் போது தொடை தசையில் காயம் அடைந்த நட்சத்திர இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா குறைந்தது நான்கைந்து வாரங்களுக்கு விளையாடாமல் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக சிஎஸ்கே அணியின் துவக்க வீரர் டெவான் கான்வே காயத்தால் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் பங்கேற்க முடியாது என்ற தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து தற்போது பதிரானா காயம் குறித்த செய்தி வெளியாகி உள்ளது. இது சிஎஸ்கே அணிக்கு இரட்டை அடியாக மாறி உள்ளது.

பதிரானா இல்லாதது சிஎஸ்கே அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும். ஏனெனில் 21 வயதான வேகப் பந்துவீச்சாளர் பதிரானா கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் டெத்-ஓவர் ஸ்பெஷலிஸ்டாக இருந்தார்.

கடந்த 2023 ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணி கோப்பை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் இந்த முறை, அவர் ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் ஆடுவதே சந்தேகமாக மாறி இருக்கிறது. தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி பதிரானா குறைந்தது நான்கு முதல் ஐந்து வாரங்களுக்கு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவின் முதல் சில போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாது.

ஐபிஎல் 2024 முடிவிற்குப் பிறகு டி20 உலகக் கோப்பை 2024 நடைபெற உள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியமும் அவருக்கு அனுமதி வழங்குவதற்கு முன் எச்சரிக்கையான அணுகுமுறையை கையில் எடுக்கும்.. எனவே, சிஎஸ்கே அணி அவரை மட்டுமே நம்பி இருக்க முடியாது.

பதிரானா இல்லாதது நடப்பு சாம்பியன் அணியான சிஎஸ்கேவுக்கு பெரிய பின்னடைவாகும், ஆனால் அவருக்கு பதிலாக வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் சிஎஸ்கே அணியில் பந்து வீசக் கூடும் என கூறப்படுகிறது. 2024 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே ரூ 2 கோடிக்கு முஸ்தாபிசுர் ரஹ்மானை ஏலத்தில் ஒப்பந்தம் செய்தது.

முஸ்தாபிசுர் ரஹ்மான் இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். ஆனால், எங்குமே அவர் பெரிய அளவில் தனது முத்திரையை பதிக்கவில்லை. இது போன்ற வீரர்கள் தோனி தலைமையில் சிஎஸ்கே அணியில் ஆடும் போது சிறப்பாக ஆடுவார்கள் என்பதால் அவர் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *