பாஜகவுக்கு இன்று இரண்டு இடத்தில் குட்டு: ஒன்று உச்ச நீதிமன்றம்; மற்றொன்று தேர்தல் ஆணையம்!

மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சசகம் தகவல் தொழில்நுட்ப விதிகளில் சில திருத்தங்களை கொண்டுவந்தது. இதன்மூலம் சமூக மற்றும் செய்தி ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத்தன்மையை சரி பார்க்க ஒரு குழுவை அரசு அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்த திருத்தத்தை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, மும்பை உயர் நீதிமன்றம், மத்திய கொண்டு வந்த திருத்ததில் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் குறித்து கேள்வியெழுப்பியது. மேலும், மத்திய அரசிற்கு Press Information Bureau இருக்கும்பொழுது தனியாக ஒரு உண்மைக் கண்டறியும் குழு எதற்கு என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. வழக்கில் தீர்ப்பளித்த மும்பை உயர் நீதிமன்றம், ஐடி விதிகள் 2023ஐ அமல்படுத்த தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு (FactCheck Unit) அமைக்கும் அறிவிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், தகவல் தொழில்நுட்ப திருத்த சட்டம் 2023-க்கு எதிரான வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம், முடிவெடுக்கும் வரை இந்த தடை இருக்கும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், விக்சித் பாரத் செய்திகளை அனுப்பவும் மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி தொடர்ந்து வளர்ச்சியடைந்த பாரதம் பற்றி பேசி வருகிறார். இதனிடையே, வளர்ச்சியடைந்த பாரதம் (Viksit Bharat) என்ற பெயரில் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இந்த குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற பெயரில் பிரதமர் மோடியிடம் இருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற பெயரில் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்த நிலையில், வாட்ஸ்அப் மூலம் விக்சித் பாரத் செய்திகளை அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில், அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்த செய்திகள் பகிரப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *