சத்துகள் நிறைந்த சுவையான ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி.? – ரெசிபி இதோ

ஆட்டுக்கால் பாயா தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றாகும். இதன் சுவை மற்றும் ஊட்டச்சத்தின் காரணமாக பிரபலமான அசைவ உணவு வகைகளில் ஒன்றாக உள்ளது. இது ஆட்டுகாலிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இந்த காரமான ஆட்டுக்கால் பாயாவை பிரஷர் குக்கரில் மிக எளிதாக தயாரிக்கலாம். இந்த செய்முறையில் ஆட்டுக்குட்டியின் கால்கள் சுவையான மசாலாப் பொருட்களுடன் சேர்த்து கெட்டியான சூப்பாக சமைக்கப்படுகிறது. இந்த ஆட்டுக்கால் பாயாவை இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டால் சுவை அள்ளும்.

சத்து நிறைந்த சுவையான ஆட்டுக்கால் பாயாவை எளிய செய்முறையில் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம். இந்த சன்டே உங்கள் வீட்டில் இதை செய்து பாருங்கள். அப்புறம் எல்லா வாரமும் உங்கள் வீட்டில் அனைவரும் இதைதான் கேட்பார்கள்.

தேவையான பொருட்கள் :

ஆட்டுக்கால் வேக வைக்க தேவையானவை :

ஆட்டுக்கால் – 4

பெரிய வெங்காயம் – 3

தக்காளி – 2

பச்சை மிளக்காய் – 4

துருவிய தேங்காய் – 1 கப்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன்

மிளகு தூள் – 2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க தேவையானவை :

எண்ணெய் – தேவையான அளவு

பட்டை – 2

ஏலக்காய் – 2

கிராம்பு – 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

புதினா – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை:

முதலில் சுட்ட ஆட்டுக்காலை நன்கு தேய்த்து கழுவி அதில் உள்ள அழுக்கு மற்றும் முடி ஆகியவற்றை அகற்றி சுத்தமாகக் அலசி எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மசிய அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுப்பில் குக்கர் ஒன்றை வைத்து அதில் ஆட்டுக்கால், நறுக்கிய வெங்காயத்தில் முக்கால் பாகம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடுங்கள்.

பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி அதிக தீயில் 6 – 7 விசில் வரும் வரை வேக விடவும்.

குக்கரில் பிரஷர் தானாக அடங்கியவுடன் மூடியை திறந்து மேலும் சில நிமிடங்களுக்கு குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.

பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் போட்டு கொதிக்கவிடவும்.

இதற்கிடையே கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் போட்டு தாளித்துக்கொள்ளவும்.

பிறகு அதில் மீதம் உள்ள நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.

அடுத்து அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் அதில் நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலையை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இதை அப்படியே கொதித்து கொண்டிருக்கும் ஆட்டு கால் பாயாவில் கொட்டி இறக்கினால் சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *