சாக்கடையில் ஏழை மக்கள், ராமர் கோயில் பெருமையில் அரசு!: காங்கிரஸ் தலைவர்

வீடற்ற ஏழை மக்கள் சாக்கடையில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது ராமர் கோயில் எழுப்பியதை அரசு பெரிதாக பேசுகிறது என காங்கிரஸ் தலைவர் எச்.

ஆஞ்சநேயா குற்றம் சாட்டியுள்ளார். அம்மக்களுக்கு தேவையான வீடுகளைக் கட்டிக்கொடுத்தால் அதுவே ராமர் கோயில்களாக கருதப்பட்டிருக்கும் எனக் கூறியுள்ளார்.

மேலும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவை ராமருடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் எச். ஆஞ்சனேயா பேசியது பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் ஜனவரி 22-ஆம் நாள் அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோயிலில் சிலைப் பிரதிஷ்டை நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு நிறுவப்படப்போகும் சிலை ‘பாஜக ராமர்’ சிலை என முன்னாள் அமைச்சர் எச். ஆஞ்சநேயா தெரிவித்துள்ளார்.

தனக்கு ராமர் கோயில் சிலைப் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு அதிகாரப்பூர்வமாக எந்த அழைப்பும் வரவில்லை என முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்த நிலையில், ‘சித்தராமையாதான் நமது ராமர், அவர் ஏன் அந்தக் கோயில் நிகழ்வில் பங்கேற்க வேண்டும். அவரது சொந்த ஊரில் இருக்கும் ராமர் கோயிலுக்குச் சென்று அவர் மரியாதை செலுத்தினால் போதுமானது’ என காங்கிரஸ் தலைவர் ஆஞ்சனேயா தெரிவித்துள்ளார்.

மேலும், ‘அங்கு நிறுவப்படுவது ‘பாஜகவின் ராமர்’. பாஜக ஆதரவாளர்கள் மட்டுமே வரவேற்கப்படுகிறார்கள். நமது ராமர் எல்லா இடங்களிலும் இருக்கிறார். நம் அனைவர் மனதிலும் இருக்கிறார்’ என அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக சாதி, மற்றும் மதங்களின் பேரில் மக்களைப் பிரித்துக்கொண்டிருக்கிறது. வெறும் ஓட்டுக்காக மட்டும் குறிப்பிட்ட மதத்தைக் கொண்டாடுகிறது. நாட்டில் உள்ள பல பிரச்னைகளுக்கு கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *