“கொரோனாவை சாதாரண சளி காய்ச்சல் என்று மதிப்பிடக்கூடாது..” சௌமியா சுவாமிநாதன் எச்சரிக்கை..

கோவிட்-19 ஐ சாதாரண சளி காய்ச்சல் என்று மதிப்பிடக்கூடாது என்று உலக சுகாதார மையத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌம்யா சுவாமிநாதன் எச்சரித்துள்ளார். NDTV செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில், அவர் கடுமையான நோய்களின் அபாயங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், 2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 இன் முதல் அலை மற்றும் 2021 இல் டெல்டா அலை ஆகியவற்றிலிருந்து இந்தியாவின் மேம்பட்ட சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வயதானவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் முகக்கவசம் அணியுமாறு அவர் வலியுறுத்தினார் “ கடந்த நான்கு வருடங்களில் இதற்கு முன் பலமுறை நாங்கள் இதை அனுபவித்திருக்கிறோம். இதைத்தான் WHO பேசியது. இந்த ஆண்டு மே மாதம் உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை முடிவுக்கு வருவதாக WHO இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரேயஸ் அறிவித்தபோதும், இது இன்னும் உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.” என்று கூறினார்.

ஒமிக்ரானின் துணை வகையான JN.1 மாறுபாட்டின் தோற்றம் குறித்தும் பேசிய சௌமியா சுவாமிநாதன் “: JN.1 மாறுபாடு லேசானது தான் என்றாலும், காய்ச்சல், இருமல் மற்றும் வாசனை இழப்பு உள்ளிட்ட அறிகுறிகளை பரிசோதித்து அடையாளம் காண்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

கோவிட்-19 வகைகளை ஜலதோஷத்துடன் ஒப்பிடுவதற்கு எதிராக எச்சரித்த டாக்டர் சௌமியா சுவாமிநாதன், மாரடைப்பு மற்றும் மனநலப் பிரச்சனைகள் போன்ற அபாயங்கள் காரணமாக, கோவிட்-ன் நீண்டகால தாக்கங்களின் தனித்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

மருத்துவமனைகள் சிறப்பாகத் தயாராக இருக்க வேண்டும் என்பது குறித்தும், தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் தயார்நிலையை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. JN.1 என்ற புதிய மாறுபாடு காரணமாகவே தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இது சுகாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8-ம் தேதி, கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், காரகுளத்தைச் சேர்ந்த 79 வயது மூதாட்டி இந்த மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது, இந்த மாறுபாடு ஒமிக்ரானின் வழித்தோன்றலாகும் மற்றும் லக்சம்பர்க்கில் முதன்முதலில் கண்டறியப்பட்ட பைரோலா என்றும் அழைக்கப்படும் BA.2.86 உடன் நெருங்கிய தொடர்புடையது.

JN.1 மாறுபாட்டின் அறிகுறிகள் என்னென்ன?

JN.1 மாறுபாட்டின் அறிகுறிகளும் காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, தலைவலி மற்றும் லேசான இரைப்பை குடல் பிரச்சினைகள் உள்ளிட்ட பிற கொரோனா வைரஸ் வகைகளைப் போலவே இருக்கும். இருப்பினும், JN.1 முந்தைய விகாரங்களை விட கடுமையான நோயை ஏற்படுத்துகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதிக பரவும் தன்மை இருந்தபோதிலும், அறிகுறிகள் பொதுவாக லேசானவை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த மாறுபாட்டின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. தடுப்பூசிகள் JN.1 நோய்த்தொற்றுகளை முற்றிலுமாகத் தடுக்காது என்றாலும், அவை கடுமையான நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும் என்று அமெரிக்க நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *