|

புதிய ஏவுகணையால் ஆயுதப் போட்டியில் இந்தியாவை முந்துகிறதா பாகிஸ்தான்?

புதிய ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது பாகிஸ்தான். டிசம்பர் 27, 2023 அன்று பாகிஸ்தான் ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளை ஏவும் “ஃபதா 2” ராக்கெட் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்புத்துறை (ஐஎஸ்பிஆர்) தகவல்களின்படி, இந்த ஏவுகணை 400 கிலோமீட்டர் வரை சென்று துல்லியமாக தாக்கக்கூடியது என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக ஆகஸ்ட் 24, 2021 அன்று, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட “ஃபதா 1” ராக்கெட் பாகிஸ்தானில் சோதனை செய்யப்பட்டது.

ஃபதா 2 ஏவுகணையின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஐஎஸ்பிஆர் தகவலின்படி, ஃபதா 2 ஏவுகணையில் மேம்படுத்தப்பட்ட பறக்கும் திறன் இடம்பெற்றுள்ளது. மேலும், இதில் மேம்படுத்தப்பட்ட டார்கெட் – டூ – டார்கெட் தாக்குதல் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

இந்த தனித்துவமான ஏவுகணையில் பொறுத்தப்பட்டுள்ள இலக்கை தாக்கும் தொழில்நுட்பம் மிக துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. அதோடு சேர்த்து அதன் பறக்கும் திறனும் அதை வலிமைமிக்கதாக மாற்றுகிறது.

இது போன்ற சிறப்பம்சங்களால் இந்த ஏவுகணை தனது இலக்கை துல்லியமாக தாக்கும் என்றும், அதன் குறியை தவறவே விடாது என்றும் ஐஎஸ்பிஆர் கூறுகிறது.

சில ராணுவ ஆயுதம் மற்றும் உபகரண நிபுணர்கள், இந்த ஃபதா 2 ஏவுகணை “ஃபிளாட் ட்ராஜெக்டரி ஏவுகணை” என்று அழைக்கின்றனர். அதற்கு அர்த்தம் இந்த ஏவுகணை கிடைமட்டமாக பறக்கக்கூடியது. ரேடாரில் தெரியாது.

இது குறித்து பாதுகாப்புதுறை நிபுணரான ஓய்வு பெற்ற பிரிகேடியர் சாத் முகமது பிபிசியிடம் பேசுகையில், ஃபதா ஒரு ஃபிளாட் ட்ராஜெக்டரி ஏவுகணை, இதை ராடாரில் கண்டறிந்து அழிப்பது மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார்.

பாலிஸ்டிக் ஏவுகணைக்கென்று தனியான பாதை உண்டு, முதலில் அவை விண்ணில் பாய்ந்து பின்னர் பூமிக்கு திரும்பி வரும். அதன் பாதை மாறும் சமயத்தில் எதிரி ரேடார்கள் அதை கண்டறிந்து தாக்கும் என்கிறார் அவர்.

‘எல்ஆர்எஸ்ஏஎம்’ என்ற பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா உருவாக்கி வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்திய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு

ஃபதா 2-இன் வெற்றிகரமான சோதனைக்கு பிறகு, அது இந்திய பாதுகாப்பு ஏவுகணை திட்டத்திற்கு எதிரான வலுவான ஆயுதமாக கருதப்படுவதாக கூறுகின்றனர் சில நிபுணர்கள்.

அதே போல் இந்தியாவும் சில காலமாகவே தங்களுடைய ஏவுகணை அமைப்புகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் அடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. நீண்ட தூர எஸ்-400 ட்ரையம்ப் (Triumph) தவிர, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட குறுகிய தூரம் சென்று தாக்கும் சமர் மற்றும் டிஆர்டிஓ உருவாக்கிய VSHORADS ஏவுகணைகளையும் தனது பாதுகாப்பு அமைப்பில் சேர்த்துள்ளது இந்தியா. இவை அனைத்துமே மிகக் குறைந்த தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை. இந்த ஏவுகணைகள் கடல் பரப்பில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்திய செய்தி நாளிதழான ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தியின்படி, ‘எல்ஆர்எஸ்ஏஎம்’ என்ற பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா உருவாக்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ரஷ்யாவின் S-400 ட்ரையம்ப் போல வான் பாதுகாப்பு அமைப்பின் திறன்களைக் கொண்டுள்ளது.

இந்த அமைப்பில் நீண்ட தூர கண்காணிப்பு மற்றும் ரேடார் கட்டுப்பாட்டு திறன்கள் இருக்கும். மேலும் 150, 250 மற்றும் 350 கிமீ தொலைவில் உள்ள ஏவுகணைகளைக் கண்டறிந்து இடைமறிக்கும் ஆற்றலும் இதில் உள்ளது.

இந்தியா தனது பாதுகாப்பு அமைப்பில் உள்ள ஏவுகணை தொழில்நுட்பத்தை கொண்டு தனது நகரங்கள், அணுசக்தி அமைப்புகள் மற்றும் ராணுவத்தை பாதுகாப்பதற்கான திட்டத்தை வகுத்து வருகிறது.

இஸ்ரேலிடம் இருந்து அயர்ன் டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்க நீண்ட காலமாகவே ஆசைப்பட்டு வருகிறது இந்தியா. இந்நிலையில் அயர்ன் டோம் வாங்குவதில் இந்தியாவின் விருப்பம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க இஸ்ரேல் தயாராக இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் 2013 ஜூலை மாதம் செய்தி ஒன்றை வெளியிட்டது. காரணம், அந்த அமைப்பு உட்பட அதன் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க ஒப்புக்கொண்டது இஸ்ரேல்.

ஒவ்வொரு நாடும் அயர்ன் டோமை வாங்க விரும்புகிறது, ஆனால் அது பணம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பொறுத்தது என்று கூறுகிறார் இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் பாதுகாப்புதுறை ஆய்வாளருமான எச்.எஸ்.பனாக்

“உங்களிடம் பணம் மற்றும் தொழில்நுட்பம் இருந்தால், அதை நீங்களே உருவாக்கி கொள்ளலாம்,” என்று கூறும் அவர், அதே சமயம் இந்த செய்தி அறிக்கைகள் எச்சரிக்கையுடன் பார்க்கப்பட வேண்டும் என்கிறார்.

ஆவணங்களின்படி, இந்தியாவில் தொழில்நுட்பக் (பாதுகாப்பு) குறைபாடு உள்ளது. ஆனால் “ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் நாங்கள் இதை உருவாக்கினோம், அதை உருவாக்கினோம் என்று பல செய்திகள் வருகின்றன. ஆனால் அடிப்படை உண்மைகள் வேறு” என்று கூறுகிறார் அவர்.

தலைநகர் டெல்லி அல்லது வர்த்தக மையமான மும்பை போன்ற முக்கியமான இடங்களை பாதுகாக்க இந்தியாவுக்கு இதுபோன்ற அமைப்பு தேவைப்படலாம் என்று கூறுகிறார் பாதுகாப்பு நிபுணர் ராகுல் போன்ஸ்லே.

“ஆனால் நாம் அது போன்ற அச்சுறுத்தலில் இல்லை, ஏனெனில் உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமெனில் இந்த அமைப்பு தற்போது ஹமாஸ் போன்ற அமைப்புகள் பயன்படுத்தும் ராக்கெட்டுகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது” என்று அவர் கூறுகிறார்.

‘பாகிஸ்தானுக்கு அதைச் செய்யும் திறன் உள்ளது, ஆனால் இதனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? அதனால் வரும் எதிர் வினையும் மிகக் கடுமையாக இருக்கும் என்பது வெளிப்படையாக தெரிந்ததே’ என்கிறார் அவர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *