பகீர் வீடியோ… திருமண நாளில் கூட்டாளியால் சுட்டுக் கொல்லப்பட்ட தாதா; பட்டப்பகலில் கொடூரம்

மகாராஷ்டிர மாநிலத்தின் பிரபல தாதா ஒருவர் அவரது மண நாளன்று, கூட்டாளியால் பட்டப்பகலில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.

துப்பாக்கிச்சூடு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஷரத் மொஹோலுக்கு நேற்று திருமண நாள். புனே மாநகரை பின்புலமாக கொண்ட பிரபல தாதாவான இவர், எப்போதும் ஆயுதம் தாங்கிய அடியாட்கள் சூழவே வலம் வருவார். மண நாளினை முன்னிட்டு உற்சாகமாக இருந்த ஷரத் மொஹோல், வழக்கமான பாதுகாப்பை மீறி அலட்சியமாக உலா வந்தார்.

அதனை மோப்பம் மிடித்த மர்ம நபர்கள் ஷரத் மொஹோலை கொல்லக் களம் இறங்கினார்கள். புனேவின் கோத்ருட் பகுதியின் ஒரு குறுகிய பாதையில், ஷரத் மொஹோல் தனது சகாக்கள் இருவருடன் செல்லும்போது உடன் வந்த ஒரு நபரும், பக்கவாட்டிலிருந்து வெளிப்பட்ட மற்றொருவருமாக 2 நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.

மிக நெருக்கமாக நின்று ஷரத் மொஹோலை துப்பாக்கியால் சுட்டதில் அங்கேயே அவர் சுருண்டு விழுந்தார். உடன் வந்த சகாக்கள் பதறியடித்து, ஷரத்தை கொத்தூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை இறந்தார். ஷரத் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்துவதும், அதனையடுத்து தாதாவை காப்பாற்ற அவரது சகாக்கள் துடிப்பதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

இதனையடுத்து கும்பல் மோதல் காரணமாக ஷரத் மொஹோல் கொல்லப்பட்டதாக பதற்றம் கிளம்பியது. பழிவாங்கலின் பொருட்டு தொடர் மோதல்கள் நிகழலாம் என்றும் வதந்திகள் பரவின. விசாரணை மேற்கொண்ட போலீஸார் ஷரத் கொல்லப்பட்டது கேங் வார் காரணமாக இல்லை என்றும் நிலமோசடி ஒன்றில் பணத்தை பங்கு பிரிப்பது தொடர்பான சண்டையில், அவரது கூட்டாளிகளால் ஷரத் கொல்லப்பட்டுள்ளார் எனவும் விளக்கமளித்தனர். மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் அதனை உறுதி செய்துள்ளார்.

குடியிருப்பு பகுதியில் குறுகிய பாதையில் சினிமா பாணியில், பிரபல தாதா மீதான துப்பாக்கிசூடு மற்றும் அதையொட்டிய களேபரங்களும் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷரத் படுகொலை தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *