பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி துறை அறிவிப்புகள் ஒர் பார்வை..!

பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகள் வருமாறு.,

தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டினை முன்னிட்டு, பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கென 7,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற மாபெரும் திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்த இந்த அரசால் அறிவிக்கப்பட்டு, 2497 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிதியாண்டிலும் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.

அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் உயர்ந்த நோக்கத்தோடு அமைக்கப்பட்ட உண்டு. உறைவிட மாதிரிப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் படிக்கும் ஒவ்வொரு மாணவரும் நாட்டின் முதன்மையான உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 38 மாதிரிப் பள்ளிகள் 352 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர, பல்வேறு மாவட்டங்களில் உள்ள 28 பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக 100 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் பொருத்தமான கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்கவும், அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 525 ரூபாய் செலவில் 8,200 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi Tech lab) மற்றும் 435 கோடி ரூபாய் செலவில் 22,931 தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classroom) அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்ட உள்ளன. மேலும், வரும் நிதியாண்டில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் இல்லத்தில் முடங்கிக் கிடந்தவை குழந்தைகள் மட்டுமல்ல, அவர்களது கல்விக் கனவும் தான். அதனை மீட்டு அவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைப் போக்கவும் கற்றல் இழப்பை ஈடுசெய்யவும், இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கவும் முதல்வரால் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் அனைத்துக் குடியிருப்புப் பகுதிகளிலும் தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் குழந்தைகளிடம் ஏற்பட்ட கற்றல் இழப்பை மீட்டெடுத்ததில் மிகப்பெரும் பங்காற்றியுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்திட 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வாசிப்பை நேசிக்கும் மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்கிடும் உயரிய நோக்கில் சென்னை புத்தகக் கண்காட்சியைப் போன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 2022.23 ஆம் ஆண்டு முதல் 13 கோடி ரூபாய் அரசு நிதியுதவியுடன் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில், 37 மாவட்டங்களில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிகளில், சுமார் 55 லட்சம் புத்தக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.

மேலும், இக்கண்காட்சிகளின் வாயிலாக, சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 72 இளைஞர்கள் அறிவுசார் தளத்தில் உயர்ந்திட நூலகங்கள் முதன்மைக் களமாக உள்ளன. குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பொது நூலகங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திட 213 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இந்த வரவு – செலவத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு 44,042 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *