ஆனந்த் அம்பானி திருமணம்: வைரலாகும் திருமண அழைப்பிதழ் கடிதம்!

ரிலையன்ஸ் குழும தலைவர் தொழிலதிபர் முகேஷ் அம்பானி – நீடா அம்பானி தம்பதிக்கு ஈஷா என்ற மகளும், ஆகாஷ், ஆனந்த் என்ற இரு மகன்களும் உள்ளன. இதில், ஈஷா, ஆகாஷ் ஆகியோருக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்த நிலையில், கடைசி மகனான ஆனந்த் அம்பானியின் திருமணம் நடைபெறவுள்ளது.

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் என்பவரை காதலிப்பதாக நீண்ட காலமாக தகவல் பரவி வந்த நிலையில், இருவருக்கும் அதிகாரப்பூர்வமாக திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடைபெற்றது. மும்பையில் உள்ள அண்டிலா இல்லத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நீலையில், குஜராத் மாநிலம் ஜாம் நகரில் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், அவர்களது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்கான அழைப்பிதழ் வெளியாகியுள்ளது. அதில், மார்ச் மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும், திருமணத்திற்கான முறையான அழைப்பிதழ் விரைவில் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்கான அந்த அழைப்பிதழில் முகேஷ் அம்பானி – நீடா அம்பானி ஆகியோர் தங்களது கைப்பட கடிதமும் எழுதியுள்ளனர். பசுமையான, வன விலங்குகளின் புகைப்படங்கள் அந்த அழைப்பிதழில் இடம்பெற்றுள்ளன.

முகேஷ் அம்பானி – நீடா அம்பானி அவர்கள் கைப்பட எழுதியுள்ள கடிதத்தில், “ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸ் எனும் இடத்தில் எனது மகனுக்கு நடைபெறும் திருமணத்திற்கு அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஜாம்நகர் அருகே உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு வளாகத்தை 1997 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவியது. அங்கு சுமார் 1 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன. செடிகள், மரங்கள், பூக்கள், பழங்கள் என அந்த இடமே பசுமையானதாக மாறிவிட்டது. பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்ட விலங்குகளை ஆனந்த் இங்கு வளர்த்து வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக ஜாம்நகரில் எங்களுக்கு பசுமையான நினைவுகள் உள்ளன. ஆனந்துக்கும் ராதிகாவுக்கும் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்ளுங்கள். வார இறுதியை மகிழ்ச்சியாக்குங்கள்.” என கூறப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *