“முன்னாள் அதிபருக்கான எந்தவொரு அதிகாரமும் டிரம்ப்-க்கு பாதுகாப்பு அளிக்காது”.. அமெரிக்க நீதிமன்றம் திட்டவட்டம்!

முன்னாள் அதிபருக்கான எந்தவொரு அதிகாரமும் டிரம்ப் மீதான விசாரணையில் அவருக்கு பாதுகாப்பு அளிக்காது என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் முடிவுகளை மாற்றி அமைக்க முயன்றதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்த நிலையில், முன்னாள் அதிபராக பதவி வகித்த தனக்கு, இந்த வழக்கின் விசாரணைகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி அவர் தரப்பில் கொலம்பியா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். இதையடுத்து டிரம்ப் தரப்பில் வாஷிங்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு வாஷிங்டன் நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கைப் பொறுத்தவரை முன்னாள் அதிபர் டிரம்ப் ஒரு சாதாரண குடிமகனுக்கான அதிகாரங்களுடன் விசாரிக்கப்படுவார் என்று நீதிபதிகள் கூறினர். டிரம்ப் அதிபராக பணியாற்றியபோது அவருக்கு பாதுகாப்பு அளித்த எந்தவொரு அதிகாரமும் இந்த வழக்கு விசாரணையில் அவருக்கு பாதுகாப்பு அளிக்காது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.