அயோத்தி ராமர் கோயில் திறப்பு: அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன – கோட்ட ஆணையர் தகவல்!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் வருகிற 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார்.

ராமர் கோயில் திறக்கப்படுவதையொட்டி அயோத்தியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன. கும்பாபிஷேக விழாவுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டதாக கோட்ட ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் ‘பிரான் பிரதிஷ்டை’க்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் குறித்து, கோட்ட ஆணையர் கவுரவ் தயாள் கூறுகையில்,“அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன, கோயிலுக்குள் விழாவிற்கான இருக்கை திட்டத்தை இறுதி செய்து வருகிறோம். மொத்தம் 7500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். யார் எங்கு அமர வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டு வருகிறது. வாகனங்களைப் பயன்படுத்தி மைதானத்திற்குள் விஐபிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.” என்றார்.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கும்பாபிஷேக தினத்தன்று, அந்தந்த கிராமங்கள், உள்ளாட்சிகள், கோயில்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருவிழாக்களை நடத்த வேண்டும் என்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராம பக்தர்களைக் கூட்டி பஜனை கீர்த்தனை செய்யுங்கள். கும்பாபிஷேக விழாவை டிவி அல்லது எல்இடி மூலம் மக்களுக்குக் காட்டுங்கள். உங்கள் வீட்டில் உள்ள கோவிலில் உள்ள தெய்வங்களுக்கு பஜனை-கீர்த்தனை-வழிபாடு செய்யுங்கள். வீட்டின் முன் விளக்குகள் ஏற்றுங்கள். 500 ஆண்டுகளுக்கு பிறகு இந்த புனிதமான தருணம் வந்துள்ளது.” என அவர் கூறியுள்ளார்.

ராமர் கோயில் திறப்பு விழாவின்போது, குழந்தை ராமர் சிலையை தற்காலிக இடத்தில் இருந்து புதிய கோயிலுக்கு பிரதமர் மோடி சுமந்து செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 22ம் தேதி மதியம் 2 மணி வரை கோவில் வளாகத்தில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அயோத்தி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு கோவில் கதவுகள் மூடப்படும். அன்றைய தினம் குழந்தை ராமரை யாரும் தரிசிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 20ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு குழந்தை ராமரை தரிசனம் செய்ய சாதாரண மக்கள் மட்டுமின்றி விஐபிகளும் கூட தரிசிக்க முடியாது. ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக நாளில் சிறப்பு விருந்தினர்களாக அழைப்பட்டவர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, பிரான் பிரதிஷ்டைக்கான பூஜை நேற்று தொடங்கியுள்ளது. வருகிற 22ஆம் தேதி வரை அந்த பூஜை நடைபெறவுள்ளது. அதன்பின்னர், கும்பாபிஷேகம் நடைபெறும். கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, ஜனவரி 24 முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை சடங்குகள் மரபுகளின்படி நடைபெறும். ஜனவரி 23ஆம் தேதி முதல் கோயில் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்படும் என ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். அதேசமயம், 24ஆம் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும் என்பதால் ஜனவரி 25ஆம் தேதி முதல் கோயில் கதவுகள் பொதுமக்கள் தரிசனத்துக்காக திறக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *