தமிழ்நாட்டில் பாஜக 25 க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும்: மதுரையில் சிவராஜ் சிங் சவுகான் பேச்சு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் செயல்பட்டு வருவதாக மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் மதுரையில் இன்று தெரிவித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் காவல்துறை குடியிருப்புக்கு அருகில் உள்ள பாஜக அலுவலகத்தைத் திறந்து வைத்த பின் சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, இந்த ஆண்டு நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் தமிழ்நாட்டில் 25 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதே பாஜக கூட்டணியின் இலக்கு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய அளவில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் உற்சாகமாகவும், தேர்தல் பணிகளுக்கு ஆயத்தமாகவும் உள்ளதாக கூறிய அவர், திமுகவின் ஊழலால் மக்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள் என்றும் தற்போதைய மதுரை எம்பி செயல்படாமல் இருப்பதாவும் விமர்சித்தார். மதுரை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக அமோக வெற்றி பெறும் என்றும் சௌகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். மதுரையில் பாஜகவின் 5,515 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் உள்ளனர். அவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள பொறுப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, எங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை பெற கடுமையாக உழைத்து வருகின்றனர்” என்று சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வலுவான கூட்டணியை உருவாக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது எனவும் முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் கூறியிருக்கிறார். ஏ.ஆர்.மகாலட்சுமி, மகா சுசீந்திரன் உள்ளிட்ட மதுரை பாஜக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *