Breaking: பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாத பிற மதத்தினருக்கு அனுமதி கிடையாது – நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்து மதத்தை தவிர்த்து பிற மதத்தைச் சார்ந்தவர்களோ, கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களோ கோவிலுக்குள் வருவது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

எனவே இந்து மதத்தை சாராதவர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. பிற மதத்தினருக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது என்ற பதாகையை கோவிலின் பல பகுதிகளில் வைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி இன்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி, இந்து மதத்தை சாராதவர்கள், பிற மதத்தவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கோவில் கொடி மரத்தை தாண்டி உள்ளே வந்து சாமியை பார்ப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டார். மேலும் இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்ற பதாகைகளை கோவிலின் பல பகுதிகளில் மீண்டும் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் கோவிலின் நுழைவு வாயிலில் வருகை பதிவு ஒன்றை வைக்க வேண்டும். பிற மதத்தினர் கோவிலுக்குள் செல்ல விரும்பும் பட்சத்தில், அவர்கள் அந்த வருகை பதிவேட்டில் கடவுள் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக கோவிலுக்குள் செல்ல விருப்பப்படுகிறேன் என்று அதில் உறுதி மொழி அளித்த பின்னர் அந்த நபரை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *