புலம்பெயர்தல் தொடர்பில் கனடா அடுத்த அதிரடி: தற்காலிக குடியிருப்பு அனுமதிக்கும் வரும் கட்டுப்பாடு

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவரும் கனடா அரசு, அதிரடியாக அடுத்த நடவடிக்கையைத் துவங்கியுள்ளது.

புலம்பெயர்தல் தொடர்பில் கனடா அடுத்த அதிரடி
கனடாவுக்குக் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடு, அவர்கள் எவ்வளவு நேரம் வேலை செய்யலாம் என்பதற்குக் கட்டுப்பாடு என தொடர்ந்து புலம்பெயர்தல் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதித்துவரும் கனடா அரசு, அடுத்த கட்டமாக ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கனடா வரலாற்றிலேயே முதல் முறையாக, கனடாவில் தற்காலிகக் குடியிருப்பு அனுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்க திட்டமிட்டுவருகிறது அந்நாட்டு அரசு.

நேற்று, கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சரான மார்க் மில்லர் இது குறித்துக் கூறும்போது, அடுத்த மூன்று ஆண்டுகளில், கனடாவில் தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்கப்படுவோரின் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். முதல் கட்டமாக, செப்டம்பரில் முதல் கட்டுப்பாடு விதிக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுப்பாடு சர்வதேச மாணவர்களுக்கும், வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்றும் கூறியுள்ளார் மில்லர்.

தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்கப்படுவோரின் எண்ணிக்கையை, தற்போதிருக்கும் 6.2 சதவிகிதத்திலிருந்து, கனடாவின் மக்கள்தொகையில் 5 சதவிகிதமாக குறைக்க கனடா திட்டமிட்டுவருவதாக மில்லர் தெரிவித்துள்ளார்.

பணியாளர்களுக்கு விதியும் விதிவிலக்கும்
மேலும், சில கனேடிய நிறுவனங்கள், பணிக்கு எடுக்கும் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவேண்டியிருக்கும் என்று கூறியுள்ள அதிகாரிகள், இந்த கட்டுப்பாடு, மே மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன், அந்த குறிப்பிட்ட காலியிடத்துக்கு கனேடியப் பணியாளர்கள் கிடைக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்கான காலகட்டத்தையும் குறைக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த விதியிலிருந்து மருத்துவப் பணியாளர்கள் மற்றும் கட்டுமானப்பணியாளர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. (காரணம், கனடாவில் இந்த இரண்டு துறைகளிலும் கடும் பணியாளர் பற்றாக்குறை நிலவிவருகிறது). இந்தப் பணியாளர்கள் மட்டும் இப்போது கனடாவுக்குள் அனுமதிக்கப்படும் அதே எண்ணிக்கையில், ஆகத்து மாதம் 31ஆம் திகதி வரை அனுமதிக்கப்படுவார்கள் என தற்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *