சென்னை, திருச்சி, ராமேஸ்வரம்… தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பயண திட்டம் இவை தான்..!

தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள், முதன் முறையாக, தமிழ்நாட்டில் 4 நகரங்களில் நடைபெற உள்ளது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்க கோரி, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்று நேரில் அழைப்பு விடுத்திருந்தார்.

அதனை ஏற்று, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வரும் நிலையில், அவரின் பயணத் திட்ட விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் 19 ஆம் தேதி மாலை 4 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, 4.50 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தடைகிறார்.

மாலை 5.15 மணிக்கு மெரினா கடற்கரை அருகே உள்ள அடையாறு படைதளம் செல்லும் பிரதமர், அங்கிருந்து கேலோ இந்தியா நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார். கேலோ இந்தியா நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிறகு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி இரவு ஓய்வெடுக்க உள்ளார்.

மறுநாள், ஜனவரி 20 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, 11 மணி அளவில் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு செல்கிறார். காலை 11 மணி முதல் மதியம் 12.40 மணி வரை திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

இதனை தொடர்ந்து, விமானம் மூலம் ராமேஸ்வரம் புறப்படும் பிரதமர் மோடி, மதியம் 2.10 மணிக்கு ராமநாதசாமி கோயிலை அடைகிறார். மதியம் 2.45 முதல் 3.30 மணி வரை ராமநாதசாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

அன்றைய தினம் ராமேஸ்வரத்திலேயே தங்கும் பிரதமர் மோடி, மறுநாளான ஜனவரி 21 ஆம் தேதி காலை, மீண்டும் ராமநாதசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக அரிச்சல் முனை மற்றும் கோதண்டராமசாமி கோயிலுக்கு பிரதமர் மோடி செல்கிறார். கோதண்டராமசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, சுமார் 11 மணி அளவில் விமானம் மூலம் மதுரை புறப்படும் பிரதமர் மோடி, அங்கிருந்து டெல்லிக்கு செல்கிறார்.

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 11 நாள் விரதத்தை தொடங்கியுள்ள பிரதமர் மோடி, நாடு முழுவதும் உள்ள ராமாயண இதிகாசங்களில் இடம்பெற்றுள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக நேற்று ஆந்திர மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க வீரபத்ரா கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஆலயங்களில் பிரதமர் மோடி தரிசனம் செய்ய உள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *