மாற்றுத்திறன் அரசு ஊழியர்களுக்கு போக்குவரத்துப்படி வழங்குவது நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு!

மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஊதியத்தின் கணிசமான பகுதியைத் தங்களின் போக்குவரத்துக்காக மட்டுமே செலவிட வேண்டியுள்ளது. அப்படிச் செலவு செய்தாலும்கூட, எவ்வித இடர்களுமின்றி பயணம் மேற்கொண்டு அவர்கள் தங்கள் பணியிடத்திற்குச் சென்றுவருகிறார்கள் என்றும் உறுதியாகச் சொல்ல முடியாது.

எனவேதான், ஒரு சாதாரண அரசு ஊழியர் பணிக்கு வந்து செல்வது போன்று மாற்றுத்திறனாளி அரசு ஊழியரும் பணிக்கு வந்து செல்ல வேண்டும் என்ற சமத்துவப் பார்வையின் கீழ் அரசு பல்வேறு ஆதரவுகளை வழங்கி வருகிறது. அதன்படி, பேருந்து பாஸ், போக்குவரத்துப்படி உள்ளிட்ட ஆதரவுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், 1989ஆம் ஆண்டில் தகுதியான மாற்றுத்திறன் அரசு ஊழியர்களுக்கு ரூ.50 என வழங்கப்பட்ட மாதாந்திர போக்குவரத்துப்படி, படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ரு.2500 என வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிறப்புக் காலமுறை ஊதியத்தின் கீழ் பணியாற்றும் மாற்றுத்திறன் அரசு ஊழியர்களுக்கு ரூ.2500 போக்குவரத்துப்படி வழங்குவதை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சத்துணவுத் திட்டம், அங்கன்வாடி, கிராம உதவியாளர் உள்ளிட்ட தமிழக அரசுத்துறைகளில் சிறப்புக் காலமுறை ஊதியத்தின் கீழ் பணியாற்றும் மாற்றுத்திறன் அரசு ஊழியர்களுக்கு போக்குவரத்துப்படி ரூ.2500 வழங்குவதை நீட்டித்து தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *