நாளை முதல் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் ..!

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி முடிய 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 19-ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும் பாராளுமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை நாளை 19.03.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11.00 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 20.03.2024 (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்பமனு அளிப்பதற்கு தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாக இருப்பவர்களும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.

மேலும், பாராளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10.ஆயிரமும் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வரும் 21-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று காலை 10மணி அளவில் தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *