பாரம்பரிய முறையில் ‘கிராமத்து ஸ்டைல்’ விரால் மீன் குழம்பு செய்வது எப்படி.?

மீன் குழம்பை எப்படி செய்தலும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் சிலர் இரண்டு நாட்களுக்கு மீன் குழம்பை வைத்து உண்ணுவார்கள். அதற்கு முக்கிய காரணம் முதல் நாள் வைக்கப்படும் மீன் குழம்பு எப்போதுமே அடுத்த நாள் தான் சுவையாக இருக்கும்.

எவ்வளவுதான் வகை வகையாக மீன்கள் இருந்தாலும் விரால் மீன் என்றால் அனைத்து வயதினருக்கும் பிடிக்கும். பொதுவாக கிராமங்களில் தான் விரால் மீன் கிடைக்கும். இந்த வகை மீன்கள் ஆறுகள், குளம் மற்றும் குட்டைகளில்தான் கிடைக்கும். கடலிலும் விரால் மீன்கள் கிடைக்கும். ஆனால் அவை அந்த அளவிற்கு சுவையானதாக இருக்காது என்பார்கள்.

வீடே கமகமக்கும் சுவையான கிராமத்து ஸ்டைலில் விரால் மீன் குழம்பு எப்படி வைப்பது என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்…

தேவைப்படும் பொருட்கள் :

விரால் மீன் – 1/4 கிலோ

சின்ன வெங்காயம் – 15 – 20

தக்காளி – 2

துருவிய தேங்காய் – 1/4 கப்

புளி – நெல்லிக்காய் அளவு

பூண்டு – 10 பல்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் – 1 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

வறுத்துப் பொடித்த வெந்தயம் – 1 டீஸ்பூன்

நல்லெண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

முதலில் விரால் மீனை நன்றாக சுத்தம் செய்து சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அலசி தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு கிண்ணத்தில் புளியுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கொள்ளவும்.

புளி நன்றாக ஊறியதும் அதனை கெட்டியாக கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் மண் சட்டி ஒன்றை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம் மற்றும் வெந்தயம் போட்டு கலந்து கொள்ளுங்கள்.

பிறகு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி மென்மையாக வதங்கியவுடன் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து கலந்து வதக்கிக்கொள்ளுங்கள்.

மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கலந்துகொள்ளவும்.

பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

குழம்பு நன்றாக கொதித்த பிறகு கழுவி வைத்துள்ள விரால் மீன் துண்டுகளை போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் கொதித்த பிறகு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இறுதியாக குழம்பில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவினால் சுவையான விரால் மீன் குழம்பு பரிமாற ரெடி…

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *