அதிமுக கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன்.. வேட்பாளர் தேர்வை பாருங்க.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி

சென்னை: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்கிற பட்டியலை வழங்கும் படி மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

லோக்சபா தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. திமுக லோக்சபா தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. வழக்கமாக அதிமுகதான் தேர்தல் பணிகளை முதலில் தொடங்கும். இந்த ஆண்டு திமுக முந்திக்கொண்டு பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த அதிமுக, பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்காக அதிமுக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தலின் போது தொண்டர்கள் நிர்வாகிகள் செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணி குறித்தான முடிவை நான் பார்த்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கட்சிக்காக வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்த வேலையில் இறங்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்கிற பட்டியலை வழங்கும் படி மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இன்று மாலை வரை அனைத்து மாவட்ட செயலாளர்களையும் சென்னையில் இருக்கும் படி அவர் கேட்டுக்கொண்டதாகவும், எடப்பாடி மாவட்ட செயலாளர்களை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் முனுசாமி, இன்றைய கூட்டத்தில் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வேட்பாளர் பட்டியல் தயாரிப்பது உட்கட்சி விவகாரம், அது குறித்து இப்போது சொல்ல முடியாது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *