விராட் கோலியை முதல் போட்டியிலேயே அவுட்டாக்கினேன், ஆனால்..வெளிப்படையாக கூறிய முன்னாள் வீரர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கிரேம் ஸ்வான், இந்திய வீரர் புஜாரா குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் தொடர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் வரும் 25ஆம் திகதி தொடங்குகிறது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு பின்னர் இந்திய அணி எந்த அணிக்கு எதிராகவும் தோல்வி அடையவில்லை.

அதேபோல் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான டெஸ்ட் அணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. எனவே இந்தியா – இங்கிலாந்து தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.

கிரேம் ஸ்வான்

இந்த நிலையில், முன்னாள் வீரரான கிரேம் ஸ்வான் (Graeme Swann) இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியது குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘விராட் கோலியை கூட அத்தொடரின் முதல் போட்டியிலேயே நான் அவுட்டாக்கினேன். நீங்கள் நல்ல பந்துகளை வீசினால் கண்டிப்பாக அவரை அடிக்கடி அவுட் செய்ய முடியும். ஆனால், அந்த தொடரில் நான் பந்துவீச விரும்பாத ஒரு துடுப்பாட்ட வீரராக புஜாரா இருந்தார்.

ஏனெனில், அவர் தன்னுடைய காலில் வேகமாக செயல்படக் கூடியவர். அந்த சமயத்தில் இருந்த இந்திய அணியை இப்போது நினைத்தால் வித்தியாசமாக இருக்கிறது.

அப்போது சச்சின், வி.வி.எஸ்.லட்சுமணன், வீரேந்திர சேவாக் மற்றும் விராட் கோலி ஆகியோர் இருந்தனர். ஆனால், அந்த துடுப்பாட்ட வீரர்களில் புஜாராவுக்கு எதிராக மட்டும் நான் பந்துவீச விரும்ப மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *