ரஞ்சி கோப்பையை வென்றால் BMW கார் பரிசு.. ஒரு கோடி ரூபாய் ரொக்கம்.. ஐதராபாத் அணிக்கு அடித்த லக்!

இந்திய கிரிக்கெட்டில் ஐபிஎல் பிரபலமாக இருந்தாலும் உயிர் நாடியாக கருதப்படுபவது ரஞ்சி கோப்பை தான். ஒரு காலத்தில் ரஞ்சி கோப்பை விளையாடினால் மட்டுமே இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும் என்ற எழுதப்படாத விதி கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த ரஞ்சி கோப்பை தான் பல இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களை உருவாக்கியது.

ஆனால் ஐபிஎல் ஆதிக்கத்தால் ரஞ்சி கோப்பைக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இஷான் கிசன் போன்ற வீரர்கள் எல்லாம் ரஞ்சி போட்டியில் விளையாடாமல் ஐபிஎல் தொடருக்காக அண்மையில் தயாராகி வந்தது பிசிசிஐயை எரிச்சல் அடையச் செய்தது.

இதனால் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூட, ரஞ்சிப் போட்டியே அழித்து விடுங்கள் என்று கூறி இருந்தது பிரச்சனையின் வீரியத்தை உணர்த்தியது. இந்த நிலையில் ரஞ்சி கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான நாக் அவுட் சுற்றை எதிர்நோக்கி இருக்கிறது. வரும் 23ஆம் தேதி காலிறுதி போட்டிகள் தொடங்குகிறது. இதில் மும்பை பரோடா அணியுடன் மோதுகிறது.

தமிழ்நாடு -சௌராஷ்ட்ரா அணியுடனும், மத்திய பிரதேஷ் ஆந்திர பிரதேஷ் அணியுடனும், விதர் பா கர்நாடகா அணியுடனும் பல பரிட்சை நடத்துகிறது. இந்த நிலையில் ஆந்திர பிரதேச அணி இதுவரை இரண்டு முறை மட்டுமே கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. கடைசியாக 1986 87 ஆம் ஆண்டு தான் ஹைதராபாத் அணி ரஞ்சி கோப்பையை வென்றது.

அதன் பிறகு 37 ஆண்டுகளாக அவர்களால் ரஞ்சி கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்த நிலையில் ஹைதராபாத் கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் ஜெகன்மோகன் ராவ் ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதாவது காலிறுதிப் போட்டிக்கு தயாராகும் வீரர்களை சந்தித்த அவர் ஒரு பம்பர் பரிசை அறிவித்திருக்கிறார்.

அதாவது வரும் மூன்று ஆண்டுகளில் ஹைதராபாத் அணி ரஞ்சி கோப்பையை வென்றால் வீரர்கள் அனைவருக்கும் bmw கார் பரிசாக அளிப்பேன் என்றும் அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு கோடி பரிசு தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இது ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டையுமே ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

ரஞ்சி போட்டிக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது பிஎம்டபிள்யூ கார், ஒரு கோடி ரூபாய் பரிசு என அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.உலக கோப்பையை வெல்லும் அணிக்கு கூட இத்தனை பரிசு கிடைத்திருக்காது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *