‘இந்தியா’ கூட்டணி சலசலப்பு: அய்யா கோபமா இருக்கீங்க போல? நிதிஷ்குமாருக்கு போன் போட்ட ராகுல் காந்தி!

எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணியில் சலசலப்பு தொடருகிறதாம். இதனையடுத்து ‘இந்தியா’ கூட்டணி மீது அதிருப்தியில் இருக்கும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் ராகுல் காந்தி தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக 28 கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி திடீரென பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவும் கூட ‘இந்திய’ கூட்டணியின் விஸ்வரூபம் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியது.

பாஜக உற்சாகம்: ‘இந்தியா’ என்ற பெயரே தேச துரோகம் என பேசியது பாஜக. அத்துடன் நாட்டின் பெயரையே ‘பாரத்’ என மாற்றுகிற நிலைமைக்குப் போனது பாஜக. ஆனால் 5 மாநில தேர்த்ல்கள், 4 மாநிலங்களில் காங்கிரஸுக்கு கிடைத்த தோல்வி, இடைப்பட்ட காலத்தில் காணாமல் போன இந்தியா கூட்டணி இவை அனைத்துமே பாஜகவை உற்சாகப்படுத்திவிட்டது.

நிதிஷ்குமாரால் சர்ச்சை: இந்த நிலையில் ‘இந்தியா’ கூட்டணியில் 4-வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏகப்பட்ட சலசலப்புகள் வெடித்தன. இந்தியா கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமார் தமக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை; தம்மை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை; தம்மை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கவில்லை என்கிற கோபத்தில் இருந்தார். இதே கோபத்துடன் இந்தி மொழி பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க சொன்ன தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டிஆர் பாலு உள்ளிட்டோர் மீது சீறினார் நிதிஷ்குமார். இது இந்துஸ்தான்; இந்திதான் தேசிய மொழி; ஆங்கிலம் என்பது ஆங்கிலேயருடன் போய்விட்டது என்றெல்லாம் கோபப்பட்டார் நிதிஷ்குமார். இந்த கோபங்களால் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் நிதிஷ்குமார்.

லாலு பிரசாத் அதிருப்தி?: இதேபோல பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவும் இந்தியா கூட்டணியில் அதிருப்தியில் இருந்ததால் டெல்லி கூட்டத்தில் பாதியிலேயே வெளியேறினார். நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தாமல் மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக மமதாவும் அரவிந்த் கெஜ்ரிவாலும் பரிந்துரைத்ததால் லாலு கோபமடைந்தார் எனவும் கூறப்பட்டது. இன்னொரு பக்கம், நிதிஷ்குமாருக்கும் லாலுவுக்கும் இடையே மோதல் உள்ளது எனவும் கூறப்பட்டது.

லாலு பிரசாத் மறுப்பு: ஆனால் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார் யார் மீதும் அதிருப்தியில் இல்லை; ஊடகங்கள்தான் அப்படி எல்லாம் எழுதுகின்றன. எனக்கும் நிதிஷ்குமார் மீது கோபமோ அதிருப்தியோ இல்லை. இந்தியா கூட்டணி ஒற்றுமையுடன் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் என்றார்.

ராகுல் ஆலோசனை: இந்த நிலையில் நிதிஷ்குமாருடன் ராகுல் காந்தி தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா கூட்டணியில் எந்தெந்த விவகாரங்களில் நிதிஷ்குமாருக்கு அதிருப்தி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக ராகுல் காந்தி ஆலோசனை நடத்தியதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் நிலையில் ராகுலின் இந்த முயற்சி பலன் தருமா? என்பது இனிவரும் நாட்களில் தெரியும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *