India vs England 3rd Test: முகமது சிராஜ் வேகத்தில் 319 ரன்னுக்கு சரண்டரான இங்கிலாந்து!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி தற்போது ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா 131 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களும், சர்ஃப்ராஸ் கான் 62 ரன்களும், துருவ் ஜூரெல் 46 ரன்களும் எடுத்துக் கொடுக்க 445 ரன்கள் குவித்தது.

பின்னர், முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், அஸ்வின் செய்த தவறால் இங்கிலாந்து அணி 5 ரன்களுடன் பேட்டிங்கை தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அதிரடியாக விளையாட ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

விக்கெட்டிற்காக அழைக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 2ஆவது ஓவரிலேயே ஜாக் கிராவ்லி விக்கெட்டை கைப்பற்றி கொடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500ஆவது விக்கெட்டை கைப்பற்றி கொடுத்தார். 2ஆம் நாள் போட்டிக்கு பிறகு அஸ்வின் குடும்ப அவசர சூழல் காரணமாக 3ஆவது போட்டியிலிருந்து விலகியுள்ளார். இவருக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரண்டாம் நாளில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்திருந்தது. இதில் டக்கெட் 133 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதையடுத்து இன்று 3ஆம் நாள் போட்டி தொடங்கியது. இதில், ஜோ ரூட் 18 ரன்களில் பும்ரா பந்தில் 9ஆவது முறையாக ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோவ் குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்த பென் டக்கெட் 151 பந்துகளில் 23 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 153 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் பந்தில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, ரவீந்திர ஜடேஜா ஓவரில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 41 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து பென் ஃபோக்ஸ் 13 ரன்களில் ஆட்டமிழக்க, ரெஹான் அகமது 6, டாம் ஹார்ட்லி 9, ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு ரன் என்று பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து 260 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் மீதமுள்ள 5 விக்கெட்டுகளுக்கு 59 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசியாக இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 314 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அஸ்வின் மற்றும் பும்ரா இருவரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதன் காரணமாக இந்திய அணி தற்போது 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இதுவரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதில் ரோகித் சர்மா 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *