திமுகவில் இணைகிறாரா ஜான் பாண்டியன்..? அவரே சொன்ன பதில்..!

நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தனக்கென ஒரு கணிசமான வாக்குவங்கியை வைத்திருப்பவர் தான் ஜான் பாண்டியன். குறிப்பாக, பட்டியலின மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஜான் பாண்டியன், அந்தக் கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமான போக்கையே கடைப்பிடித்து வந்தார்.

ஆனால், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது முதலாக, ஜான் பாண்டியனின் போக்கில் மாற்றம் தெரியத் தொடங்கியது.

இந்த சூழலில், 2 மாதங்களுக்கு முன்பு தாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் இல்லை; அதிமுக கூட்டணியிலும் இல்லை என அதிரடியாக அறிவித்தார் ஜான் பாண்டியன்.மேலும், திமுக கூட்டணியில் நீங்கள் சேர வாய்ப்பில்லை தானே என நிருபர்கள் கேட்டதற்கு, எப்படி நீங்க இதை முடிவு செய்யலாம். திமுக கூட்டணியில் நாங்கள் சேரக்கூடாதா என்ன? அரசியலில் நண்பரும் இல்லை, பகைவரும் இல்லை என்கிற போது யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம்” என்று கூறி பாஜகவையும், அதிமுகவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் ஜான் பாண்டியன். இதனால், ஜான் பாண்டியன் திமுக கூட்டணியில் இணையலாம் என அரசியல் களத்தில் பேச்சு எழுந்தது.

இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சி சார்பில் சென்னையில் இன்று பேச்சரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமமுக தலைவர் ஜான் பாண்டியன், திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை திமுக அரசு சரியாக கையாளவில்லை என்றும், மத்திய அரசு தான் அந்த சமயத்தில் பல உதவிகளை செய்தது எனவும் அவர் பேசினார். மேலும், பாஜகவுக்கு சாதகமாகவும் அவர் பேசி வந்தார்.

இந்நிலையில் பாஜகவுடனே கூட்டணி அமைத்து விடுவோம் என்கிற முடிவுக்கு ஜான் பாண்டியன் வந்துவிட்டதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *