அயோத்தி ராமர் பெயரில் இப்படியும் ஒரு வங்கி உள்ளதா? இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

அயோத்தி ராமரை வணங்கி புண்ணியத்தை சேர்ப்பதற்கு இப்படி ஒரு வழி உள்ளதா என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். வெறும் ஆன்மிக நம்பிக்கை மற்றும் பயிற்சியாக மட்டுமின்றி, மோட்சத்திற்கு வழிகாட்டும் இதை ஆர்வமாக செய்து வருகிறார்கள். இப்படி தனித்துவமான ஆன்மிக வங்கி உலகில் வேறு எங்கும் கிடையாது என்பதால் இது பக்தர்கள் பலரையும் ஈர்த்து வருகிறது.

அயோத்தி ராமர் கோவில் நன்கொடைகள் :

அயோத்தி ராமஜென்ம பூமியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோவில் ஜனவரி 22 ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் திறக்கப்பட்டது முன் குழந்தை ராமரை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் அயோத்தி நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ராமர் மீதான அன்பை காட்டுவதற்காக பலரும் தங்கம், வெள்ளி, கோடி கணக்கில் பணம் என நன்கொடையாக அளித்து வருகிறார்கள். இது மட்டும் தான் நன்கொடை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அன்பு, ஆன்மிகம், அமைதி, முக்தி ஆகியவற்றை பெறுவதற்கான நன்கொடைகளையும் பக்தர்கள் அளித்து வரும் விபரமும் வெளியாகி உள்ளது.

சர்வதேச ஸ்ரீ சீதாராம வங்கி :

அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடையாக பணத்திற்கு பதிலாக இன்னும் சில பொருட்களையும் பக்தர்கள் அளித்து வருகிறார்கள். அது ஒன்று தான் ராம நாமம். அயோத்தி ராமர் கோவிலுக்கு என்று தனித்துவமான வங்கிக் கணக்கு ஒன்று உள்ளது. இந்த வங்கிக் கணக்கு, ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஸ்ஷேத்திர டிரஸ்ட் அமைப்பின் தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாஸ் என்பவரால் 1970ம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்டது. இந்த வங்கிக்கு, சர்வதேச ஸ்ரீ சீதாராம வங்கி என்று பெயர். இந்த வங்கியில் இந்தியாவில் இருந்து மட்டும் ஏறக்குறைய 35,000 பேர் கணக்கு வைத்துள்ளவர். இது தவிர அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, நேபாளம், ஃபிஜி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் கணக்கு வைத்துள்ளனர்.

ராம நாம வங்கி :

இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள், “சீதாராம்” என லட்சம் முறைக்கும் மேல் எழுதிய பேப்பர்களையும், புத்தகங்களையும் அனுப்பி, முதலீடு செய்து வருகிறார்கள். ஒருவர் 5 லட்சம் முறை எழுதி அனுப்பிய பிறகு அவர்களுக்கு இலவச நோட்டுகள், சிவப்பு நிற பேனா உள்ளிட்டவைகள் வழங்கி, சர்வதேச ஸ்ரீ சீதாராம வங்கி சார்பில் புதிய கணக்கு துவங்கப்பட்டு, பாஸ்புக் வழங்கப்படும். இதுவரை இந்த வங்கிக்கு 20,000 கோடி முறை சீதாராம் என எழுதப்பட்ட நோட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. அதிலும் கடந்த மாதம் அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு இந்த வங்கிக்கு ராம நாமம் அனுப்பும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்த வங்கியின் மேனேஜர் புனித் ராம் தாஸ் மகராஜ் தெரிவித்துள்ளார்.

அதிகமான பக்தர்களை ஈர்க்கும் வங்கி :

இந்த வங்கிக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் 136 கிளைகள் உள்ளது. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ராம நாமம் எழுதிய பிறகு தபால் மூலம் இந்த வங்கிக்கு அனுப்பி வைக்கிறார்கள். தொடர்ந்து சீதாராம் என எழுதி தங்களின் கணக்கில் சேமித்து, தங்களுக்கான பிரார்த்தனையை முன் வைக்கிறார்கள். இது எந்த குறிப்பிட்ட கடவுளுக்குமானது கிடையாது. அனைவரின் நலனுக்காகவும், அமைதி, ஆன்மிக வளர்ச்சிக்காக இது செய்யப்படுகிறது என சொல்லுகிறார்கள். இது பக்தி, புண்ணியம் ஆகியவற்றை சேர்க்கும் கணக்காக பார்க்கப்படுகிறது. அதே சமயம் 84 லட்சம் முறை சீதாராம் என எழுதுபவர்கள் மோட்சத்தை அடைய அது வழிவகுக்கும் என்றும் சொல்கிறார்கள்.

வெள்ளி சுத்தியல், தங்க உளியால் உருவான ராமர் சிலை :

இதற்கிடையில் கல்லை எவ்வாறு செதுக்கி தெய்வீக தன்மை கொண்ட ராமர் சிலையாக மாற்றினார் என்பதை போட்டோ போட்டு சோஷியல் மீடியாவில் விளக்கி உள்ளார் அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலையை உருவாக்கிய மைசூருவை சேர்ந்த அருள் யோகிராஜ். ராம்லல்லாவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ராமர் சிலையின் தெய்வீக கண்களை வெள்ளி சுத்தியல் மற்றும் தங்க உளி கொண்டு செதுக்கியதாகவும், அந்த சுத்தியல் மற்றும் உளியின் படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *