ரோஹித் சர்மாவுக்கு கல்தா.. மும்பை இந்தியன்ஸ் போட்ட பிளான்.. ஐபிஎல் ஏலத்தில் நடக்கப் போகும் ட்விஸ்ட்

2024 ஐபிஎல் தொடர் தான் ரோஹித் சர்மாவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கப் போகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே தொடர விரும்பினாலும் கூட ரோஹித் சர்மாவை அணியில் தக்க வைக்க அந்த அணி தயாராக இல்லை என கூறப்படுகிறது.

கடந்த பத்து சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் ரோஹித் சர்மா. கடைசி மூன்று ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வெல்லவில்லை. கடைசி இரண்டு தொடர்களில் பிளே-ஆஃப் சுற்றுக்கும் செல்லவில்லை. இதை அடுத்து கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கி விட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வம்படியாக வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது மும்பை இந்தியன்ஸ்.

2024 ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக மட்டுமே விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரின் தனிப்பட்ட பேட்டிங் செயல்பாட்டின் மீதும் நம்பிக்கை இல்லாத மும்பை இந்தியன்ஸ் அணி 2025 மெகா ஐபிஎல் ஏலத்திற்கு முன் ரோஹித் சர்மாவை அணியில் இருந்தே நீக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்துக்கு முன் ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை நீக்க வேண்டும். அந்த அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் வேறு நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொண்டு ரோஹித் சர்மாவை நீக்க உள்ளது. அதனால், 2025 ஐபிஎல் ஏலத்தில் ரோஹித் சர்மா பங்கு பெறப் போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு, மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைக்கப் போகும் அந்த நான்கு வீரர்கள் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், பும்ரா மற்றும் இஷான் கிஷன் என கூறப்படுகிறது. 2024 ஐபிஎல் தொடரில் இஷான் கிஷன் சரியாக ரன் குவிக்கவில்லை என்றால் அவரை நீக்கி விட்டு, வெளிநாட்டு வேகப் பந்துவீச்சாளர் ஒருவரை அந்த அணி தக்க வைக்க வாய்ப்பு உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *