கர்ப்பப்பைவாய் புற்றுநோய் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

மகப்பேறு மருத்துவர் ஆர். திவ்யாம்பிகை

பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றநோய்களில் மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக இருப்பது, கர்ப்பப்பைவாய் புற்றுநோயாகும்.

2020 ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி, உலகளவில் 3,42,000 பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறந்துள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது. இதில், இருபத்தொரு சதவீதம் இந்திய பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் குறித்த, விழிப்புணர்வு பெண்களிடையே இல்லாததே…

இதற்காகவே, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முழுவதுமே, கர்ப்பப்பைவாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள், சிகிச்சைமுறை போன்றவற்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மகப்பேறு மருத்துவர் ஆர். திவ்யாம்பிகை.

கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் ஏற்படும் காரணங்கள்:

கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் என்பது யூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) என்ற வைரஸ் கிருமியின் தாக்குதலால் ஏற்படுகிறது. இந்த பாப்பிலோமா வைரஸ் திருமணத்துக்கு பின் உடலுறவு கொள்வதால் சிலருக்கு ஏற்படும் வைரஸ் தொற்றாகும். இந்த வைரஸ் தாக்கிய பின் உடனடியாக எந்த பாதிப்பும் தெரியாது. ஆனால், 10-15 ஆண்டுகள் கழித்து இது புற்றுநோயாக மாறும் தன்மைக் கொண்டது.

பொதுவாக, சில பெண்களுக்கு திருமணத்துக்கு பின்பு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு, நாளடைவில் தானாக சரியாவதும் உண்டு. இதனால், பெரும்பாலான பெண்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டதே கூட தெரியாமல் போகும். ஆனால், தானாக சரியாகாமல் தொடரும்போதுதான் அது புற்றுநோயாக உருமாற்றம் பெறுகிறது.அதுபோன்று, ஒருவர் பலருடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதாலும் இந்த பாப்பிலோமோ வைரஸ் கிருமி தாக்கும் அபாயம் உண்டு.

அறிகுறிகள்:

ஆரம்ப கட்டங்களில், கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் பொதுவாக எந்த அறிகுறிகளையும் கொண்டிருப்பதில்லை. இதனால், கண்டறிவது கடினம். ஆனால், புற்றுநோய் பரவத் தொடங்கும் ஆரம்ப கட்டங்களில் சில அறிகுறிகள் தோன்றலாம். உதாரணமாக, ஒரு மாதவிடாய் முடிந்து அடுத்த மாதவிடாய் தொடங்கும் இடைப்பட்ட காலத்திற்குள் மீண்டும் ஒரு உதிரப் போக்கு ஏற்படும். சிலருக்கு உடலுறவுக்கு பின் உதிரப்போக்கு ஏற்படும். சிலருக்கு தொடர்ந்து துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளைப்படுதல் வெளிப்படும். சிலருக்கு மலக்குடலில் ரத்தப்போக்கு ஏற்படும் வாய்ப்பு உண்டு. அடிவயிற்றில் வலி, முதுகுவலி போன்றவை தொடர்ச்சியாக இருப்பதும் ஒரு அறிகுறியாகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *