நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர்

ஒரு ஊர் அல்லது நகரத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தூய்மை பணியாளர்களின் பங்கு மிக முக்கியமான ஒன்று. தூய்மை பணியாளர்களின் சுமையை நாம் குறைக்க வேண்டும் என்றால், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை பிரித்து தர வேண்டியது நம்முடைய கடமை ஆகும். அடுத்த தலைமுறைக்கு நாம் இந்த பூமியை, மாசுபடுத்தாமல் விட்டுச் செல்வதற்கும் ,குப்பையை தரம் பிரித்து தருவது மிக இன்றியமையாத ஒன்று.

இதுகுறித்து உலக அளவில் பல்வேறு வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில், நூதன முறையில் குப்பையை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது

நூதன முறையில் விழிப்புணர்வு போட்டி வைத்த நகரமன்றத் தலைவர்

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இந்தநிலையில் நகராட்சி முழுவதிலும் தூய்மையாக வைத்துக்கொள்ள பல்வேறு அறிவிப்பு பலகைகள் மற்றும் ஆங்காங்கே மக்கும் குப்பை , மக்காத குப்பை என இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நகர மன்ற தலைவர்எம்.கே.டி கார்த்திக் பொதுமக்களிடம் நூதன முறையில் விழிப்புணர்வு செய்வதற்காக சில போட்டிகளை அறிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் விளம்பரம்

நம் நகரம் நம் தூய்மை என்ற தலைப்பில் உங்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு அதை என் whatsapp நம்பருக்கு அனுப்புங்கள் முதலில் வெற்றி பெறும் மூன்று நபர்களுக்கு சைக்கிள் வழங்கப்படும் எனவும், போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து பெண்களுக்கும் நிச்சயம் பரிசு வழங்கப்படும் என அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் கூடுவாஞ்சேரியில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது வீட்டு வாசலில் கோலமிட்டு அதை நகர மன்ற தலைவர் எம்.கே.டி கார்த்திக் அவரது whatsapp எண்ணிற்கு அனுப்பி வைத்தனர்.

போட்டி போட்டுக் கொண்டு பரிசுகள் வாங்கிய ஊர் மக்கள்

இதில் வெற்றி பெற்ற முதல் மூன்று நபர்களுக்கு சைக்கிளும் ,அடுத்த மூன்று நபர்களுக்கு பட்டுப்புடவை வழங்கப்பட்டது. வீட்டிலும் போட்டியில் பங்கேற்ற 1716 பெண்களுக்கு தலா 5 கிராம் வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டது. அதேபோல சிறுவர்கள் சிறுமிகளுக்கும் நம் நகரம் நம் தூய்மை என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற முதல் 3 நபர்களுக்கு சைக்கிளும் வழங்கப்பட்டது. நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய நகர மன்ற தலைவர் எம்.கே.டி கார்த்திக் அவர்களுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *