Lord Dattatreyar: இவரை வழிபட்டால்‌ மும்மூரத்திகளையும் ஒரே சமயத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும்!

சிவபெருமான், விஷ்ணு பகவான், பிரம்ம தேவர் இணைந்து, அத்ரி முனிவர் அனுசுயா தம்பதியினருக்கு அவர்கள் விரும்பி கேட்டுக் கொண்டபடிக்கு, மகனாகப் கொடுக்கப்பட்டவர் ஸ்ரீ தத்தாத்ரேயர். மூன்று சொரூபங்கள் இணைந்து விளங்குவதால், இவரைத் “திருமூர்த்தி”எனவும் அழைப்பர்.

அத்ரி தம்பதியினர்க்கு, “சுசீந்திரம்” புண்ய தலத்தில், மார்கழி மாதம் பௌர்ணமி நாளில், மிருகசீரிடம் நட்சத்திரத்தில், மும்மூர்த்திகளும் இணைந்த அவதாரமாக, பூமியில் அவல நிலையை ஒழிக்கவும், நாடு வளம் பெறவும், தர்மம் தழைத்து, அதர்மம் அழியவும், ஸ்ரீ தத்தாத்ரேயர் அவதரித்தார்.

காடு மலைகளில் அவரைக் கண்ட முனிவர்கள் இவர் சாதாரணப் பிறவி அல்லர் என உணர்ந்தனர். வேதம் நன்கு கற்றுத் தேர்ந்த அவரைத் தமது குருவாகவே ஏற்றுக் கொண்டனர். கண்களை மூடி தியானத்தில் இருந்து உலகைக் காப்பவர் எனப் புரிந்து கொண்டனர். தாணூமாலயனின் வடிவமே இவரின் அம்சம் எனவும் கூறினர்.

சிரஞ்சீவியாக வாழும் சிறப்பு பெற்ற இவருடைய உருவம்,மூன்று முகங்கள், சங்கு, சக்கரம், தாமரை, சூலம், ஜெபமாலை மற்றும் கமண்டலம் ஏந்தியபடி ஆறு கரங்கள் கொண்டவர். இவருக்கு கருடனும், அன்னமும், காளையும் வாகனங்களாக உள்ளன‌.

இவரை வழிபட்டால்‌ மும்மூரத்திகளையும் ஒரே சமயத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். குழந்தை வரம், தேக ஆரோக்யம், மன அமைதி மற்றும் பல வளங்களும் பெறுவதற்கு இவரை தரிசித்தால், சகல நலமும் கிடைக்கும் என்பது ஆழ்ந்த நம்பிக்கை. இவருக்கு என்று உள்ள காயத்ரி மந்திரம் சொல்லி இவரை வழிபடுவார்கள்.

இமயமலை ஆத்ரேய மலைப் பகுதியில், ஒரு குகையில், பல வருடங்கள் தவமிருந்தார், இன்றும் அது “தத்தர் குகை” என அழைக்கப்படுகிறது. மேலும் வடக்கு திசையில், கிர்நார் மலைத்தொடரின் உச்சியில் இவரது பாதுகை அமைந்துள்ளதாக கூறுவர்.

. இப்போது மகாபலேஷ்வர் என அழைக்கப்படும்

ஸஹ்பே மலையில் நீண்ட காலம் இருந்ததால், இன்று வரை”தத்தாக்ஷேத்ரம்” என அது அழைக்கப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில், கடல் மட்டத்திலிருந்து, 5650 அடி உயரத்தில், மலை மீது, இவரது ஆலயம் இருப்பதாகவும், ஜன்னல் வழியே தரிசனம் செய்யும் இவரின் கோவிலொன்று குல்பர்க்கா எனுமிடத்தில் உள்ளது எனவும், தமிழகத்தில் சேங்காலிபுரம் எனும் புகழ் பெற்ற தலத்தில் உள்ள இவரது “தத்த குடீரம்” , உடையார் பட்டியில் உள்ள “கந்தகிரி விஸ்வரூப தத்தர் மேலும் நாமக்கல், சுசீந்திரம் தாணூமாலயன் கோவில் போன்றவை மிக புகழ் பெற்ற தலங்கள்.

ஸ்ரீ பரசுராமருக்கு குருவாக இருந்து, “ஸ்ரீ வித்யா உபாசனை” உள்ளிட்ட மந்திரங்களை உபதேசம் செய்தவர் எனவும், வியாச பகவானால் “சிறந்த அவதாரம்” எனப் புகழப்பட்டு,”தத்தாத்ரேயர் சாந்தி மந்திரம்”, மன அமைதி, திருஷ்டி, தீவினை அகல வேண்டி உள்ள மந்திரம் எனவும் கூறுவர்.

பூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு, சூர்ய சந்திரன், கடல் போன்ற 24 குரு தமக்கு உண்டெனவும், இவற்றிலிருந்து படிக்க வேண்டிய பாடங்கள் பல உண்டு எனவும் கூறி, இவைகளின் தன்மையால் ஈர்க்கப்பட்டு, “அவதூத கீதையை” இயற்றியவரிவர் என்பர்.

இவ்வாறு பல மகிமை, பெருமைகளைத் தன்னகத்தே கொண்டு, மனித குல நல் வாழ்விற்கு பல வகையிலும் நல் வழிகாட்டிக் கொண்டிருக்கும் ஸ்ரீ தத்தாத்ரேயரை தவறாது வழிபட்டு,வாழ்வின் துயர் துடைத்து மகிழ்வோம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *